Tuesday 27 November 2018

விதுர நீதி 1-9

விதுர நீதி
பதிவு – 1🌺
🌲விதுரர் பிறந்த கதை 🌲
மகா பாரதத்திற்கு முந்தைய காலத்தில் ஆணி மாண்டவ்யர் என்ற முனிவர் தனது ஆசிரமத்திற்கு அருகில் உள்ள மரத்தினடியில் அமர்ந்து பேசா நோன்பு (மௌன விரதம்) மேற்கொண்டு இருந்தார் . அந்த நேரத்தில், காவலர்களால் துரத்தப்பட்ட திருடர்கள், தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை மாண்டவ்யரின் ஆசிரமத்தில் மறைத்து வைத்து, தாங்களும் அங்கேயே மறைந்து கொண்டனர். காவலர்கள் ஆசிரமத்தை அடைந்து, திருடர்களைப் பற்றியும், அவர்களின் கொள்ளைப் பொருட்களைப் பற்றியும் மாண்டவியரிடம் கேட்டனர்.
மாண்டவ்யர் மௌன விரதத்தில் இருந்ததால், காவலர்களுக்கு மறுமொழி சொல்லவில்லை. எனவே காவலர்கள் ஆசிரமத்தில் நுழைந்து அங்கு மறைந்திருந்த திருடர்களையும், கொள்ளையடித்த பொருட்களையும், முனிவரையும் இழுத்துக் கொண்டுபோய் மன்னன் முன் நிறுத்தினர். மன்னனின் ஆணைப்படி, திருடர்களுடன் சேர்த்து முனிவரும் கழு மரத்தில் ஏற்றப்பட்டார்.
முனிவர் கழுவிலேற்றப்பட்ட பிறகும், சாகாமல் உயிருடன் இருப்பதைக் காவலர்கள் மூலம் அறிந்த மன்னவன் மாண்டவிய முனிவரிடம் மன்னிப்பு கோரினார்.மன்னனின் ஆணைப்படி, மாண்டவ்யரின உடலுக்கு வெளியே உள்ள கழு மரத்தின் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்தனர். கழுவின் ஒரு பகுதியை உடலுடன் தாங்கிக் கொண்டே பயணித்த மாண்டவிய முனிவர் ஆணி மாண்டவ்யர் என்ற பெயரால் அறியப்பட்டார்.
பின்னர் ஆணி மாண்டவியர், தர்ம தேவனிடம் ஒரு தவறும் செய்யாத தன்னைக் கழுவில் ஏற்றித் தண்டனை அடைய காரணம் கேட்டார். அதற்கு தர்ம தேவன் , முற்பிறவியில் நீங்கள் சிறுவனாக இருந்த போது, புல்லைக் கொண்டு ஒரு பூச்சியின் பின்புறத்தைத் துளைத்த செயலே, இப்பிறவியில் கழுவில் ஏற்றப்படக் காரணமாயிற்று என்றார்.
குழந்தைகள் செய்யும் தவறுகளைச், சாத்திரங்கள் பாவமாக கொள்ளாது என்று கூறுகையில், சிறு குற்றத்திற்காக என்னைக் கொடுமையாக தண்டித்தபடியால், மனிதர்களில் கீழ்க் குடியில் பிறப்பாய் என தர்ம தேவனுக்கு சாபமிட்டார் ஆணி மாண்டவ்யர். தர்ம தேவனும் அடுத்த பிறவியில் விதுரனாகப் பிறந்தார்.
காசி மன்னனின் மகள்கள் அம்பிகா , அம்பா, அம்பாலிகா ஆகியோர் தங்களுடைய சுயம்வரத்தின்போது அஸ்தினாபுரத்து மன்னன் சாந்தனு மகன் விசித்திர வீரியனுக்கு மணம் செய்வதற்காக பீஷ்மரால் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களில் இருவரை விசித்திரவீரியனுக்கு மணம் முடித்து வைத்தார்.விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது முதல் மகனான (கிருஷ்ண த்வைபாயனன்) வியாசரிடம் அம்பிகா மற்றும் அம்பாலிகாவை அனுப்பி வைத்தார். அப்போது அச்சத்தினால் அம்பிகா தனது கண்களை மூடிக்கொண்டதால் அவர்களுக்கு பிறந்த திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தார். இவரின் புதல்வர்களே கௌரவர்கள் எனப்படுகின்றனர்.
அம்பாலிகாவுக்கு பாண்டு பிறந்தார்.இவரின் புதல்வர்களே பாண்டவர்கள் எனப்பட்டனர்
திருதராஷ்டிரன் குருடனாக பிறந்ததால் இரண்டாம்முறை செல்லுமாறு சத்தியவதி கேட்டுக்கொண்டாள்.இரண்டாம் முறை அம்பிகா செல்லாமல் தனது வேலைக்காரியை அனுப்பினாள். அவர்களுக்கு பிறந்தவரே விதுரன் ஆவார்.
மஹா பாரதத்தில் விதுரர் திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான்.
தர்ம தேவன் எப்போது எதற்கு திருதராஷ்டிரனுக்கு சமூக நீதி கருத்துக்களை அறிவுரை கூறுகிறான்? அது எவ்வாறு விதுர நீதியாக உருவெடுக்கிறது ? நாளை பார்க்கலாம்

பதிவு - 2
சூதாட்ட நிகழ்வுகள் கூறும் தர்மம்
விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி (Step Brother) என்றும்,
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் கடந்த பதிவில் பார்த்தோம் .
அவர் மகாநீதிமான்,தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் . வில்லில் அவரை மிஞ்ச கிருஷ்ணனாலும் முடியாது. அப்படி இருக்க போர் என்று வந்து விட்டால் கௌரவர்கள் பக்கம் தான் போரிட வேண்டும் .அது அதனை சுலபம் இல்ல
அதே நேரத்தில் கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் கிருஷ்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் .
பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட முடியாத மனநிலை.
துரோணருக்குப் புத்திர பாசம்.
கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். தன் திறமையை நிரூபித்து அர்ஜுனனை விட பெரியவன் என்ற பெரும் புகழும் பெற வேண்டும் என்ற விருப்பம்
மேலும் இவர்கள் தர்மத்துக்கு எதிரான அணியில் இருந்ததால் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று விதி நிர்ணயித்தது .
தர்ம சாஸ்திரம் கூறிய விதிபடி
எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும்,கணவன்மார்களும்,
மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில்
வைத்துக் கொள்ள வேண்டும்.மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா.? இல்லையே
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும் போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள் . அதற்காக தர்மம் தீர்மானித்த தண்டனை — யுத்தத்தில் மரணம். தர்மம் விதுரர்க்கு அப்படி எளிதாக தண்டனை வழங்க இயலாதே.
ஏனெனில் விதுரர் அப்பழுக்கில்லாதவர்.
சூதாட்ட மன்றத்தில் மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து,துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி விதி யுத்தத்தில் சாகடிக்க முடியும். மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் யுதிஷ்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை -தர்மராஜர் (விதுரர்) சமநிலை
சரியாக வராதே.? .தர்மமே தர்மத்துக்கு எதிராக போரிட முடியும்மா ?
எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் - போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக., துரியோதனனுக்காக போராட வேண்டிய சூழ்நிலை. அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது.
விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை.மஹாபாரதப் போருக்கு முடிவே கிடைத்திருக்காது .அவர்
கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது.
சரி இதற்கும் விதுரருக்கும் விதுர நீதிக்கும் என்ன சம்பந்தம் ?
இருக்கிறது. மற்றவர்கள் போல் யார் பக்கம் தர்மம் இருக்கிறதோ அவர்களே ஜெயிக்கட்டும் என்று அவரால் இருந்து விட முடியவில்லை. உயிர் இழப்புகளை தடுக்க விரும்பினார் . அதற்காக அவர் இரு முடிவுகள் எடுத்தார் .
ஒன்று போரில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது .
மற்றொன்று எப்படியேனும் திருதராஷ்டிரனுக்கு அறிவுரை கூறி போரை நிறுத்துவது ?
போரில் தான் கலந்து கொல்லாமல் தவிர்ப்பதற்காக அவர் கிருஷ்ணனை வேண்டினார். விதுரர் பற்றி கிருஷ்ணனும் நன்கறிவர் .அதனால் அவருக்கு உதவ தூது எனும் பேரில் கிருஷ்ணனே நேரில் வந்தார் ,
அதற்காக கிருஷ்ணர் ஒரு உபாயம் செய்தார் . என்ன உபாயம் ?
அடுத்த பதிவில் பார்க்கலாம் .

பதிவு-3
விதுரர் வில்லுடைத்த காரணம்
ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை கெளரவர்களிடம் இருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம்,ரொம்ப ரொம்ப சிம்பிள்.
மனிதர்களின் மனோதத்துவத்தை புரிந்து நன்கு பயன்படுத்தி செயல்பட்டார்.
எல்லோருக்கும் தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன் தூது.
பாண்டவர் வனவாசத்திலிருந்து திரும்பிய பிறகும் அவர்களுக்குரிய பங்கான நாட்டைத் தர கௌரவர்கள் மறுத்தனர். எங்கும் பகைமைக் காற்று வீசியது. அதனால் கிருஷ்ணர், கடவுள் அவதாரமாக இருந்த போதிலும் சமாதானம் நிலவ இறுதி முயற்சியாக ஒரு முறை முயன்று பார்க்க, தாமே, பாண்டவர்களின் தனிப்பட்ட தூதுவனாக, திருதராஷ்டிரனது சபைக்குச் சென்றார்.
அஸ்தினாபுரத்திற்குச் செல்லும் முன்பு, பாண்டவரிடம் அவர் நீண்ட நேரம் கலந்து பேசினார். அவர்களும் அவரிடம் தங்களது இறுதியான கருத்தைத் தெரிவித்தனர். பின்னர் சாத்யகி தொடர கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தை அடைந்தார். கௌரவர்கள் அவரது வரவை முன் கூட்டி அறிந்து, அவரை வரவேற்க ஆடம்பரமாக ஏற்பாடுகள் செய்தனர். தங்களது பகட்டான, வரவேற்பினால் அவரை மகிழ்வுறுத்த விரும்பினர்.
துரியோதனனே, தனது தம்பியரும், கர்ணனும் புடை சூழ நகர வாயிலுக்கே சென்று அவரை வரவேற்றான். தன்னுடைய அரண்மனையில், அரச போகத்துடன் தங்கியிருக்கவும், தங்கள் விருந்தினராகத் தங்களுடன் அமர்ந்து உணவருந்தவும் அவரை வேண்டினான். ஆனால் கிருஷ்ணன் அமைதியாக “என் அன்பின் உறவினர்களே! உங்கள் பகைவரது தனிப்பட்ட தூதுவனாக நான் வந்துள்ளேன். ஒரு தூதுவன் தான் ஏற்று வந்த தூது, வெற்றிகரமாக முற்றுப்பெறும் வரை அவர்கள் விருந்தினனாக உணவருந்தக் கூடாது,” என்று தடுத்து மறுத்து விட்டார்.
அங்ஙனம் கூறிவிட்டு கிருஷ்ணர் அருகிலிருந்த விதுரரது மாளிகைக்குச் சென்றார். எதிர்பாராத வகையில் தம் வீட்டில் ஐயனைக் கண்டவுடன் விதுரர் பெற்ற மகிழ்ச்சிக்கும், வியப்புக்கும் அளவேயில்லை. கிருஷ்ணரைப் பணிந்து வணங்கி, தம் பக்தியை பலவிதமாக வெளியிட்டு, அவரை மதித்துப் போற்றினார். பக்தனது வீட்டில் தங்கியதைக் கிருஷ்ணரும் பெரிதும் அனுபவித்து மகிழ்ந்தார்.
விதுரர், “ ஐயனே! இந்த சமாதான தூதுப்பணியை ஏற்று மதிப்பற்ற கௌரவர்களிடம் ஏன் வந்து துன்புறுகிறீர்கள்! அவர்கள் போருக்குத் தினவு எடுத்துத் திரிவதைத் தாங்களே அறிவீர்களே,” என்று கேட்டார். அதற்குக் கிருஷ்ணர் புன்சிரிப்புடன், “ என் அன்பின் விதுரா! எனக்கு எல்லோருடைய மன நிலையும் தெரியும். துரியோதனனும் அவனுடைய சகோதரர்களும், என்னுடைய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் ஒருகாலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இரத்தம் சிந்த விடாமல் தடுப்பது என் கடமை என்றே எண்ணினேன். இறுதி முயற்சி ஒன்று செய்து பார்த்து விடுகிறேன்” என்று விடையளித்தார்.
பிறகு கிருஷ்ணர் திருதராஷ்டிரனுடைய அரச சபையை அடைந்தார். திருதராஷ்டிரன், துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன் எல்லோரும் அவரை வரவேற்று தக்க ஆசனம் தந்து உபசரித்தனர். அமரும் முன் கிருஷ்ணர் தம்மைச் சுற்றிலும் பார்த்தார். சிறப்பு வாய்ந்த முனிவர்களும், சாதுக்களும், அவரவர்களுக்கேற்ற தரத்தில் ஆசனம் தரப்பெறாததைக் கவனித்தார். அதனால் ”பெருமை மிக்க அவர்கள் அனைவரும் தக்கபடி அமர்ந்த பிறகே நானும் அமர்வேன்,” என்று கூறியவாறு அமராமல் நின்றார்.
சில நொடிகளில் அவரது மனம் மகிழ அங்ஙனமே அனைவரும் மதிக்கப் பெற்று அமர்ந்தனர். பிறகு கிருஷ்ணர் தாம் மேற்கொண்டு வந்த தூதின் கருத்தை விளக்கினார். “மாட்சிமை மிக்க பெரியோர்களின் முன்னிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பெற்ற பணியைச் சீர்தூக்கிப் பார்த்து பாண்டவருக்கு அவர்களுடைய பங்கு அரசைத் தரும்படி திருதராஷ்டிரனிடம் நான் ஒரு தாழ்மையான விண்ணப்பம் இடுகிறேன். இது வீணாக இரத்தம் சிந்துவதைத் தடுத்து, நிலையான அமைதியை உறுதியாக அளிக்கும்.” என்று சுருக்கமாகக் கூறி முடித்தார்.
பீஷ்மர், துரோணர் போன்ற பெரியோர்கள் கிருஷ்ணரது கருத்துக்களை முழுமையாக ஆதரித்தனர். ஆனால் துரியோதனன் நாட்டைக் கூறு போட்டுத் தருவது என்பது இயலாத செயல் என்று மூர்க்கத்தனமாக எதிர்த்தான். சற்றும் சிந்திக்காமல், “ கிருஷ்ணா! என்ன நேர்ந்தாலும் ஓர் அங்குல அளவு நாடு கூட அவர்களுக்குத் தர முடியாது என்று பாண்டவர்களிடம் போய்ச் சொல்லுங்கள்! போருக்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்,” என்று வெடித்துக் கூறினான்.
திருதராஷ்டிரனுக்கு உள்ளூர தன் மகனின் பிடிவாதமான் செயல் மகிழ்ச்சியையே தந்தது. எனினும், மகனது கருத்தை மாற்றுவது போல, மெல்லிய குரலில் ஏதோதோ கூற முயற்சி செய்தான். காந்தாரி கூட பகைமையான சூழ்நிலையை மாற்ற மகனிடம் வேண்டி முயன்றாள். ஆனால், துரியோதனன், நம்பிக்கையுள்ள தன் தோழனான கர்ணனும் மற்றும் சிலரும் தன் கூற்றை ஆதரிக்கவே, தன் பிடிவாதத்தினின்றும் இறங்கவில்லை.
கிருஷ்ணர் இறுதியாக ஒருமுறை “பாண்டவர் வலிமை குன்றியவர்கள் என்று நினைக்க வேண்டாம். பீமன் அர்ஜுனனுடைய உறுதியார்ந்த வலிமையும், தர்மஜாவின் நேர்மையான கோபமும், உலகம் முழுவதையுமே அடியோடு அழித்து விடக் கூடிய ஆற்றல் பெற்றவை. அனைத்து மனித குலத்திற்காக அவர்கள் அமைதி நிலவுவதையே விரும்புகிறார்கள். அதனால் மறுபடியும் ஒருமுறை இனிய இயல்போடு தீர சிந்தித்து, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு பெறுங்கள்” என்று அவர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் அதிகாரப் பித்தும், அகங்காரமும் கொண்ட கெளரவருக்கு, செவிடன் காதில் ஊதிய சங்காகவே அவரது சொற்கள் இருந்தன.
கிருஷ்ணரைச் சிறை பிடிக்கவும் அவர்கள் கள்ளத்தனமாக முயன்றனர். ஆனால் பரமாத்மா கிருஷ்ணர், ஒரு நொடி நேரம், தமது உண்மை ஸ்வரூபத்தை (விஸ்வரூபத்தை) வெளிக் காட்டினார். குருடனான திருதராஷ்டிரனுக்கும் ஒரு நொடி நேரம் பார்வை தந்து, தம்மைக் காண வைத்தார். அவரது தெய்வீக உருவத்தைக் கண்டு கௌரவர்கள் கண் கூச மலைத்து நின்றனர்.
மற்றவர்கள் பயபட்டாலும் துரியோதனன் எதற்கும் பயப்படவில்லை .துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும்
அவமதித்துப் பேசினான்.கிருஷ்ணனும் "யுத்தம் நிச்சயம்" என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.
திரும்பும்முன்,கிருஷ்ணருடைய சாரதி கேட்டார்.
சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்.?” என்றார் .
கிருஷ்ணா் சொன்னார், " என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா.?
என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார். மாய கண்ணன் அல்லவா .உலகை இயக்குபவனே அவன் தானே .அவன் அறியாதது என்று உலகில் உண்டா ?
கிருஷ்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள்.
அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது.
ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு.அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு.போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கிருஷ்ணனை தன் வீட்டில் உபசாரம் செய்தது.கோவத்தை உண்டு பண்ணியது .
விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான்.
குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.
(ஏற்கனவே இருந்த மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்து விட்டது)
விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை.அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. என்னை அவமானப்படுத்திய இந்த
துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன்.அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.
யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை. இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா.?
துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா.?
விதுரர் வைத்திருந்த வில். மஹாவிஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல முடியாது.அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர்.
போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.!
இதனை அறிந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தான் விதுரர் மாளிகையில் தங்கி,
துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து.,விதுரர்
வில்லை முறிக்க வைத்து விட்டார்.
தான் இல்லாத சூழ்நிலையிலும் , தர்மம் பாண்டவர்கள் பக்கத்தில் இருந்ததாலும் , தர்மத்திற்கு எதிராக தர்மத்தின் தலைவனே போரிட வேண்டிய சூழலை தவிர்க்கவும் கிருஷ்ணர் விதுரர் வேண்டுகோளுக்கு மனம் இறங்கி அவரை பாண்டவர்களுக்கு எதிராக போரிட முடியாமல் செய்தார் ,
இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால் ஒரு எளியவனுக்கு அநியாயம் நிகழும் பொது அதிலிருந்து தப்பிக்க அவன் செய்த புண்ணியம் எல்லா வழிகளையும் காட்டும்.ஆயிரம் வழிகள் இருந்தாலும் அவன் செய்த பாவம் கண்ணிருந்தும் குருடனாய் மாற்றி விடும் . பாண்டவர்கள் செய்த நற்செயல்களே அவர்களை எல்லா சூழ்நிலைகளிலிருந்தும் விதுரர் மற்றும் கிருஷ்ணர் உதவியால் தப்பித்து தர்மத்தின் வழியில் நடக்க முடிந்தது . பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ,அஸ்வத்தாமன் என தன்னிகரில்லாத வீரர்களை பெற்ற போதும் கௌரவர்கள் செய்த பாவம் யுத்த களத்தில் கொடூர மரணத்தை தந்தது .
விதுர நீதியில் விதுரர் சொன்னதுதான் , “ அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும் “ .
விதுரர் போரிட முடியாத சூழ்நிலையிலும் போரை தவிர்க்க அவர் எடுத்த இறுதி முயற்சிதான் போரின் முதல் நாள் திருதராஸ்டிரனுக்கு அவர் கூறிய அறிவுரை. அவரது மதிப்பு மிக்க அறிவுரைகளே அவரது பெயரில் விதுர நீதியாக தொகுக்கப்பட்டன. அது எப்போது நிகழ்ந்தது ? .அதை அடுத்த பதிவில் காணலாம்.

பதிவு-4
திருதராஷ்டிரனுக்கு சஞ்சையன் கூறிய அறிவுரை .
கிருஷ்ணர் அவையை விட்டு வெளியேறவும் , விதுரர் தான் போரில் கலந்து கொள்ளாது இருக்க தன வில்லை உடைத்து விட்டு வெளியேறுகிறார். போர் உறுதியான நிலையில் பாண்டவர்கள் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்பினார் .அதனால் சஞ்சயனை பாண்டவர்கள் இருப்பிடம் சென்று விசாரித்து
வர திருதராஷ்டிரன் கூறுகிறார் .அதனை ஏற்று சஞ்சையன் பாண்டவர்கள் இருப்பிடம் சென்று சந்தித்து தகவல்களை பெற்று கொண்டு மீண்டும் திருதராஷ்டிரனை சந்திக்க ஹஸ்தினாபுரம் திரும்புகிறார்.
சஞ்சையன் திருதராஷ்டிரனை சந்தித்தல்
ஹஸ்தினாபுரத்தை அடைந்த அவர்,அரண்மனையின் வாயில் காப்போனிடம், “ஓ! வாயில்காவலனே, பாண்டுவின் மகன்களை சந்தித்து தகவல் பெற்று சஞ்சயன் திரும்பி வந்திருக்கிறான் என்று சொல். தாமதிக்காதே. மன்னர் விழித்திருந்தால் மட்டும் அவரிடம் சொல். அவரிடம் முதலில் தெரிவித்த பிறகே நான் உள்ளே நுழைய விரும்புகிறேன் ” என்றார்.
இதைக் கேட்ட வாயில்காவலன், திருதராஷ்டிரனிடம் சென்று, “ மன்னர் மன்னா , நான் உம்மை வணங்குகிறேன். உம்மைக் காண விரும்பி சஞ்சயன் நமது அரண்மனை வாயிலில் காத்திருக்கிறார். அவர், பாண்டவர்களின் செய்தியைத் தாங்கி வந்திருக்கிறார். தங்களை சந்திக்க வேண்டும் என்று தங்கள் அனுமதி வேண்டி நிற்கிறார் . உள்ளே அனுமதிக்கலாமா? ” என்றான்.
அதற்கு மன்னன் வாயில் காவலனிடம், “நான் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருக்கிறேன் என்று சஞ்சயனிடம் சொல். சஞ்சயனை வரவேற்பாயாக. நான் அவனை வரவேற்க எப்போதும் தயாராக இருக்கிறேன். அனுமதி தடை அவனுக்கு எப்போதுமில்லை எனும்போது, ஏன் அவன் வெளியே இருக்க வேண்டும்? . உடன் வரச்சொல் என்று அனுமதி தந்தார்.
பின்னர் மன்னனின் அனுமதியுடன், கூப்பிய கரங்களுடன், அந்த அகன்ற அறைக்குள் நுழைந்த சஞ்சயன் நேராக திருதராஸ்டிரன் முன் சென்று அவரை வணங்கி நின்றான்.
தொடர்ந்து கூறுகிறார் .வணக்கம் மன்னா , இங்கிருந்து சென்ற நான், பாண்டு மகன்களைக் கண்டேன். உமக்கான வணக்கங்களைத் தெரிவித்த பாண்டுவின் மகனான புத்திக்கூர்மையுடைய யுதிஷ்டிரன், உம்மையும் உமது மகன்களையும் நலம் விசாரித்தான். நீர் உமது மகன்களுடனும், பேரர்களுடனும், நண்பர்களுடனும், ஆலோசகர்களிடமும், உம்மை நம்பியிருக்கும் அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறீரா என வினவினான்” என்றார் .
பதிலுக்கு யுதிஷ்டிரனது நலனை திருதராஷ்டிரன் விசாரித்தான் .
சஞ்சயன் பார்வையில் யுதிஷ்டிரன்
சஞ்சயன் திருதராஷ்டிரனிடம், “பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன், தனது ஆலோசகர்களுடன் நலமாக இருக்கிறான். ஏற்கனவே தனக்குச் சொந்தமாக இருந்த உடைமைகளை, அவன் அடைய விரும்புகிறான். புத்திக்கூர்மையும், பரந்துப்பட்ட கல்வியும் கொண்டிருக்கும் அவன் , அதையும் தவிரத் தொலைநோக்குடனும், அற்புத மனநிலையுடனும், கண்டிக்கத்தக்க எதையும் செய்யாமல், அறத்தையும், செல்வத்தையும் அடைய முயற்சிக்கிறான். அந்தப் பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அறத்தைவிட ஊறிழையாமை {அஹிம்சை} இன்னும் அதிக மேன்மையானது, செல்வம் குவிப்பதை விட உயர்ந்தது அறம். வாழ்வின் உயர்ந்த நோக்கத்திற்கும், அறத்திற்கும் உகந்த நடைமுறையிலும், மகிழ்ச்சியிலும், இன்பத்திலும், அவனது மனம் எப்போதும் உள்ளது.
தன் சக்தியால் அல்லாமல், நூலால் இப்படியும் அப்படியும் இழுக்கப்படும் பொம்மையென (இவ்வுலகில்) மனிதன் வாழ்கிறான் . யுதிஷ்டிரனின் துன்பங்களைக் கண்ட பிறகு, விதியின் சக்தி, மனித முயற்சியின் விளைவுகளைவிட மேன்மையானது என்றே நான் கருதுகிறேன். நிச்சயம் துன்பத்தில் அழியப்போவதும், பாவகரமானதும், பேசக்கூடாததுமான உமது தகாத செயல்களைக் கண்டால், தகுந்த எதிரி கொடுக்கும் காலம் வரைதான் உமது பதவி காலம் , நீதியின் வழி நின்று ஜெயித்து உங்கள் பாராட்டை அவர்கள் வெல்லக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் அவன் நிலையை எடுத்துரைத்தல்
பாவங்கள் அனைத்தையும் விடுத்து, இனியும் வைத்துக் கொள்ள முடியாத தேய்ந்து போன சட்டையை ஒரு பாம்பு கழற்றி விடுவதைப் போல, நீரே தாங்கிக் கொள்ளும் வகையில் {உம்மால் அவனுக்கு இழைக்கப்பட்ட} பாவ மூட்டைகளை விடும் வீரனான யுதிஷ்டிரன, தனது இயற்கையான நிறைநிலையால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.
ஓ! மன்னா, அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டுக்கும் முரணான உமது நடவடிக்கைகளையும், நீதிமான்களின் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து பாருங்கள் .. ஓ! மன்னா , இவ்வுலகில் கெடுபுகழ் பெற்ற நீர், உயிர் விட்டு நீங்கி செல்லும் போது மறு உலகில் துன்பங்களையே அறுவடை செய்வீர்.
உமது மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் நீர், பாண்டவர்களை விலக்கி வைத்துவிட்டு, அவர்களுக்குரிய சொத்தை அனுபவிக்க நினைக்கிறீர். அநீதியான இந்தச் செயல், உலகத்தில் கொடுஞ்செயலாக பேசப்படுகிறது. இந்த உமது செயல் உமக்குத் தகுந்ததன்று.
ஞானமற்றவன், பிறப்பால் தாழ்ந்தவன், கொடூரன், நீண்ட நாள் பகை கொள்பவன், க்ஷத்திரிய அறங்களில் உறுதியாக நிலைத்து நிற்காதவன், சக்தியற்றவன், தீய மனநிலை கொண்டவன் ஆகியோரையும், உண்மையில், இது போன்ற குறிகளைத் தன்னிடம் கொண்டவனையும் பெருந்துன்பமே பின்தொடர்கிறது.அவனது இறுதி காலம் அன்பான துறையற்ற தனிமையில் கொடுந்துயரில் கழியும் .அந்நிலை பெற விரும்புகிறீர்களா ? மன்னா !!
ஒருவன் நல்ல குலத்தில் பிறப்பதும், பலவானாவதும், புகழ்பெறுவதும், பல்வேறு கதைகளை அறிவதும், வாழ்வின் சுகங்களை அனுபவிப்பதும், புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுவதும், எப்போதும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள அறம் மறம் ஆகியவற்றின் தெரிவுமுறை அறிவதும் ஒரு மனிதன் பின்பற்றும் அறத்தினாலேயே நிகழ்கிறது.
புத்திக்கூர்மையும், துன்ப காலங்களின் அறம் மற்றும் மறம் ஆகியவற்றைத் தெரிவு செய்யும் முறையையும், அறத்தின் சடங்குகளையும் அறிந்த ஆலோசகர்களில் முதன்மையானவர்களால் கவனிக்கப்படும் எந்த ஒரு மனிதனும் , தன் துறைகள் அனைத்தின் பயன்பாடுகளையும் தக்க வைத்துக் கொள்ளும் , தீய செயல்களையா ஆற்ற முடியும்?
உமது வேலையில் என்றும் அர்ப்பணிப்புடன் இருக்கும் இந்த ஆலோசகர்கள் {அமைச்சர்கள்}, இங்கே ஒற்றுமையாகக் காத்திருக்கின்றனர். பாண்டவர்கள் தங்கள் பங்கைத் திரும்பப் பெறப் போவதில்லை என்பதே உங்கள் மக்களின் உறுதியான தீர்மானமாக இருக்கிறது. எனவே, சூழ்நிலையின் சக்தியால் நீங்கள் எடுத்த தவறான முடிவால் குருக்களின் அழிவு நேரப்போகிறது என்பது உறுதி. குற்றங்களால் தூண்டப்பட்டால், யுதிஷ்டிரன் உங்களுக்குத் தீமையை வேண்டி, தன் பாவங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்து, குருக்களை முன்கூட்டியே அழித்துவிடுவான். அந்தச் செயலின் பழி இவ்வுலகில் உமதே ஆகும்.
உண்மையில், பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன் இவ்வுலகத்தை விட்டு சொர்க்கத்துக்கே உயர்ந்து, அங்கே பெரிதாக மதிக்கப்பட்டான் என்றால், இது தேவர்களின் விருப்பத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? தனிப்பட்டவரின் முயற்சியால் ஆவது ஒன்றுமில்லை என்பதையே இது நிறுவுகிறது. இந்தக் காரியத்தில் எந்த ஐயமும் இல்லை.
உயர்பிறப்பு, வீரம் ஆகிய குணங்களைக் கண்டு, வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ நம்பி, (மனிதர்களிடம் உள்ள) வளமை, வறுமை, உறுதி, உறுதியற்ற தன்மை .ஆகியன வருவதில்லை . மன்னன் பலி {மஹாபலி}, இதன் காரணங்களைத் தேடி, (முற்பிறவிகளில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த பிறவிகளுடைய சங்கிலித்தொடரின்) தொடக்கத்தைக் கண்டடையத் தவறி, காலமே அனைத்துக்கும் காரணம் என்று கருதினான்.
கண், காது, மூக்கு, தீண்டல் {தோல்}, நாக்கு ஆகியனவே {ஐம்பொறிகளே} ஒரு மனிதனின் ஞானத்துக்கான கதவுகள். ஆசை ஒடுங்கினால், இவை தங்களையே திருப்தி செய்து கொள்ளும். எனவே, மகிழ்ச்சியாகவும், அலட்டிக் கொள்ளாமலும் ஒருவன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதில் வேறு விதமாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். சரியாகச் செய்யப்பட்டால், ஒரு மனிதனின் செயல்கள், அவை விரும்பிய விளைவை நிச்சயம் ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். இப்படியே தாய் மற்றும் தந்தையின் செயலால் பிறந்த குழந்தை, உணவும், நீரும் கொடுத்து முறையாகப் பராமரிக்கப்படும்போது வளர்கிறது. மனிதர்கள் இவ்வுலகில், அன்பு, வெறுப்பு, இன்பம், வலி, புகழ், பழி ஆகியவற்றுக்கு ஆட்படுகிறார்கள். ஒரு மனிதன் நேர்மையாக நடந்து கொள்ளும்போது புகழப்படுகிறான்.
கணக்கிலடங்கா உயிர்களின் அழிவை நிச்சயம் கொண்டு வரப்போகும் பாரதர்களின் மன வேறுபாடுகளுக்கு (அதற்கு நீரே வேர் என்பதால்), உம்மையே நான் குற்றஞ்சாட்டுவேன். அமைதி தீர்மானிக்கப்படவில்லையென்றால், {அந்த} உமது தவறால், காய்ந்த புற்குவியலை {வைக்கோலை} எரிக்கும் சுடர்மிகும் நெருப்பைப் போல அர்ஜுனன் குருக்களை எரித்துவிடுவான்.
ஓ! திருதராஷ்டிரரே, எந்தத் தடையையும் ஏற்காத உமது மகன் சொல் கேட்டு, பகடையாட்டத்தின் போது சச்சரவைத் தவிர்க்காமல், வெற்றி மகுடம் தரிக்கப்பட்டதாகக் கருதிக் கொள்பவர் அனைத்து உலகிலும் நீர் ஒருவர் மட்டுமே .. இப்போது அதன் பலனைப் பாரும், நன்றிமிக்க ஆலோசகர்களை {விதுரர் போன்றோரை} மறுத்து, நம்பத்தகாதவர்களை {சகுனி, கர்ணன் போன்றோரை} ஏற்ற உமது பலவீனத்தின் காரணமாக, இந்தப் பரந்த செழிப்பான பேரரசை உம்மால் தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. உன் அனைத்து சொந்தங்களும் உன் கண் முன்னே ஆணவத்திற்கும் , பேராசைக்கும் சிக்கி அழிந்து போவதை கண் முன்னே காண்பாய் ? . எது சந்தோசம் என நீ நினைக்கிறாயோ அதனால் சந்தோசம் இல்லை என்றார்
எனது விரைந்த பயணத்தினால் களைப்பும் சோர்வும் அடைந்திருக்கும் நான், படுக்கைக்குச் செல்ல உமது அனுமதியைக் கேட்கிறேன். என்று அனுமதி கேட்டு உறங்க சென்று விடுகிறார் , சஞ்சையன் வார்த்தைகளில் உள்ள தர்மம் உணர்ந்த திருதராஷ்டிரன் மனம் நொந்து விரக்தியடைகிறார் . இதிலிருந்து மீள என்ன வழி என யோசிக்கும் பொது ஆலோசனை வேண்டி விதுரரை அழைக்கிறார் .
விதுரர் வந்தாரா ? ஆலோசனை தந்தார ? நாளைய பதிவில் பார்க்கலாம் ? 

பதிவு-5
விதுரன் சொன்ன ஞானத்தின் விளக்கம்
அறிவுள்ள மனிதன் ஞானம் கொண்டவன் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கற்றவன்.பேராசை, கர்வம், ஆணவம் , சுயநலம் கொண்ட மனிதன் மனம் எப்போதும் அனுமதியின்றி உறக்கமற்று திரியும். அவனால் எப்போதுமே சுயமாக யோசிக்க இயலாது. பிரச்சனைகளிலிருந்து சமாளித்து வெளி வரும் நிலையிலிருந்தாலும் அவர்களால் தைரியமாக அதை செயல்படுத்த இயலாது.
திருதராஷ்டிரனுக்கு மனிதனின் உண்மையான ஞானம் எது என எடுத்துக் கூறிய பகுதியே விதுர நீதியின் முதல் அத்தியாயமாக வருகிறது.
திருதராஷ்டிரனுக்கு ஆலோசனை தர விதுரர் வருதல்
சஞ்சையன் ஆலோசனையை கேட்ட பின் திருதராஷ்டிரன் மனம் அமைதியை தொலைத்து நிலையில்லாமல் அலைந்தது. தன் மனம் அமைதியுற ஏதேனும் வழி கிடைக்குமா என யோசித்தார்.விதுரர் நினைவு வந்தது.
மன அழுத்தம் தாளாமல் மன்னன் திருதராஷ்டிரன், வாயில் காப்போனிடம், “நான் விதுரனைக் காண விரும்புகிறேன். தாமதமில்லாமல் விதுரனை இங்கே அழைத்து வா” என கட்டளையிட்டான்.
திருதராஷ்டிரனனால் அனுப்பப்பட்ட அந்தத் தூதன் விதுரனிடம் சென்று, “ஓ! பெரும் ஞானம் கொண்ட மன்னனான நமது தலைவன் திருதராஷ்டிரன் உம்மைக் காண விரும்புகிறார். உடன் அழைத்து வர கட்டளையிட்டார் ” என்றான்.
வாயில் காப்போலன் வழியாக மன்னர் திருதராஷ்டிரன் உத்தரவை ஏற்றுக் கொண்ட விதுரன் அவனுடனே புறப்பட்டு அரண்மனைக்கு வந்தார்.
வாயில் காவலனிடம், “என் வரவை திருதராஷ்டிரருக்குத் தெரிவிப்பாயாக” என்று கூறி திருதராஷ்டிரனிடம் அனுப்பி வைத்தான். அந்த வாயில் காவலன் திருதராஷ்டிரனிடம் சென்று, “ஓ! மன்னர்களில் முதன்மையானவரே , உமது கட்டளையின் பேரில் விதுரர் இங்கே வந்திருக்கிறார்.அவர் உம்மை காண விரும்புகிறார். அவரை அனுமதிக்க எனக்குக் கட்டளையிடுவீராக” என்றான்.
அதற்குத் திருதராஷ்டிரன் வாயில் காப்போனிடம், விதுரன் உள்ளே வரட்டும். விதுரனைக் காண நான் விரும்பாமலோ, தயார் நிலையில் இல்லாமலோ எப்போதும் இருந்ததில்லை” என்றான். பிறகு மன்னன் அனுமதி பெற்ற வாயில் காவலன் வெளியே சென்று விதுரனிடம் மன்னர் அனுமதி பெற்ற செய்தி கூறி வணங்கினார்.
வாயிற் காப்போளனின் செய்தி பெற்ற விதுரர் திருதராஷ்டிரனின் அறையை அடைந்தார். சிந்தனையில் மூழ்கியிருந்த திருதராஷ்டிரனிடம், “ வணங்குகிறேன் மன்னா! , தாங்கள் என் உதவி கோரி அழைத்ததாக செய்தியறிந்தேன்.உடன் விரைந்து வந்தேன்.கட்டளை இடுங்கள் மன்னா! , காத்திருக்கிறேன் ”என்றார்.
திருதராஷ்டிரன் விதுரனிடம், “ஓ! விதுரா, சஞ்சயன் பாண்டவர்களை சந்தித்து விட்டு திரும்பிவிட்டான். இனியும் தாமதித்தால் என் புத்திரர்கள் , உறவினர்கள் என் பேராசையால் என் கண் முன்னே இறப்பதை தவிர்க்க இயலாது என என்னைக் கடிந்து கொண்டு சஞ்சயன் சென்றுவிட்டான். அரசவையின் மத்தியில், நாளை அவன் கிருஷ்ணருடன் ஆலோசித்து பாண்டவர்கள் முடிவெடுத்த போர் அறைகூவலை யுதிஷ்டிரன் தந்த செய்தியாக வழங்குவான். அந்த வீரன் யுதிஷ்டிரன் என்ன செய்தி அனுப்பியிருப்பான் என்பதை என்னால் இன்று யூகிக்க முடிகிறது. இதனால் , என் மனம் நிம்மதியின்றி அலைகிறது. எனது உடல் கொதிக்கிறது, அது என்னைத் தூக்கமில்லாமல் செய்துவிட்டது.
திருதராஷ்டிரனின் முதல் கேள்வி
தூக்கமின்மையும், {உடல்} எரிச்சலும் {கொதிப்பும்} கொண்ட மனிதனுக்கு எது நன்மையானது என்பதை எங்களுக்குச் சொல். ஓ! தமையனே!, நீ அறம் மற்றும் பொருளை, அதன் தர்மார்த்தங்களை அறிந்திருக்கிறாய் .பாண்டவர்களிடமிருந்து சஞ்சயன் திரும்பி வந்ததிலிருந்து, எனது இதயம் அமைதியை அறியவில்லை. சஞ்சயன் என்ன சொல்லப் போகிறானோ என்ற அச்சத்தால் நிறைந்து இருக்கும் என் புலன்கள் அனைத்தும் குழம்பி இருக்கின்றன” என்றான் திருதராஷ்டிரன்
பேராசையுள்ளவனின் உறக்கமற்ற நிலை
திருதராஷ்டிரன் நிலையறிந்த விதுரன் அவனிடம் ,“திருடன், காமுகன், தன் செல்வமனைத்தையும் இழந்தவன், வெற்றியடையத் தவறியவன், பலவீனமானவன், பலமான மனிதனால் தாக்கப்பட்டவன் ஆகியோரை உறக்கமின்மை ஆட்கொள்கிறது.
ஓ! மன்னா இந்தப் பெரிய துயரங்களுக்கு நீர் ஆட்படவில்லை என நான் நம்புகிறேன். பிறர் பொருளின் மீது பேராசை கொண்டதால் நீர் வருந்தவில்லை எனவும் நான் நம்புகிறேன்” என்றான்.
அறநெறி நிரம்பிய நன்மை
திருதராஷ்டிரன் விதுரனிடம், “நன்மை தரக்கூடியதும், உயர்ந்த அறநெறிகள் நிறைந்தவை என்ன? இந்த அரச முனிவர்களின் {ராஜரிஷிகளின்} குலத்தில், நீ மட்டுமே ஞானமுள்ளோரால் போற்றப்படுகிறாய். நீ தான் விளக்கமளிக்க வேண்டும்?” என்றான்.
விதுரன் திருதராஷ்டிரனிடம், “அனைத்து அறமும் அருளப்பட்ட மன்னன் (யுதிஷ்டிரன்), மூவுலகையும் ஆட்சி செய்யத் தகுந்தவனாவான் . இருப்பினும், உம் தரப்பில் வைத்துக் கொள்ள அவன் எவ்வளவுதான் தகுந்தவனாக இருப்பினும், உம்மால் நாடு கடத்தப்பட்டான். அவன் கொண்டதுக்கெல்லாம் நேர்மாறான குணங்களையே நீர் கொண்டிருக்கிறீர்கள்.
என்னதான் அறம் மற்றும் அறநெறியுடன் இருந்தாலும், நீர் பார்வையற்றவராக இருப்பதால் முறையான பங்கை இன்னும் கொடுக்காமல் இருக்கிறீர். குற்றமற்ற தன்மை, அன்பு, நீதி, உண்மை மற்றும் சக்தியில் கொண்ட விருப்பம் ஆகியவற்றின் விளைவாலும், தர்மத்தின் மீது அவன் கொண்டிருக்கும் நம்பிக்கையாகும், உம்மீது வைத்திருக்கும் மரியாதையாலும், உங்களால் தரப்பட்ட எண்ணிலடங்கா தீங்குகளை யுதிஷ்டிரன் பொறுமையாகத் தாங்கிக் கொண்டே தங்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்து வருகிறான்.
தர்மத்தை பற்றி அறிந்திருந்தும் , பேராசையால் அதர்மம் புரியும் துரியோதனன், சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன், துச்சாசனன் ஆகியோரிடம் பேரரசின் பராமரிப்பைக் கொடுத்த பிறகு, நாட்டின் செழிப்பில் நீர் எவ்வாறு நம்பிக்கை கொள்ளலாம்?. அதன் பின் உங்களால் எப்படி நிம்மதியாக இருக்க இயலும் ? என்று கேட்கிறார் விதுரர்.
ஒருவன் ஞானம் பெற்றிருப்பதற்கான அடையாளங்கள்
வாழ்வின் உயர்ந்த நிலைகளில் பணியாற்றாமல் தன்னறிவு {ஆத்ம ஞானம், சுயஞானம்}, முயற்சி {உழைப்பு}, பொறுமை, அறத்தில் உறுதி ஆகியவற்றைக் கொண்டவன் ஞானி {புத்திசாலி மனிதன்} எனப்படுகிறான்.
மேலும், செயல்களில் ஈடுபாடு, புகழ்ச்சிக்குத் தகுதி, பழியைத் தவிர்ப்பது, நம்பிக்கை, மதிப்பு ஆகியவை ஞானம் கொண்ட புத்திசாலி மனிதனின் அடையாளமாகும்.
கோபமோ, மகிழ்ச்சியோ, செருக்கோ {கர்வமோ}, போலிப்பணிவோ, மலைப்போ, மாயையோ, ஒருவனை வாழ்வின் விளிம்புகளிலிருந்து அவனை தடுமாற செய்யவில்லையென்றால் அவன் ஞானி என்றே கருதப்படுவான்.
ஒருவனது செயல்களின் நோக்கங்களும், பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளும், பகைவரிடம் மறைக்கப்பட்டே இருந்தாலும், செய்த பிறகு மட்டுமே ஒருவனது செயல் அறியப்பட்டாலும் அவன் ஞானி எனக் கருதப்படுகிறான்.
எவனது பரிந்துரைக்கப்பட்ட செயல்கள் வெப்பத்தாலோ, குளிராலோ, அச்சத்தாலோ, செல்வத்தாலோ, வறுமையாலோ தடைப்படாமல் இருக்கிறதோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான்.
எவனுடைய தீர்மானங்கள் விருப்பத்தில் இருந்து விடுபட்டு அறம் செல்வம் ஆகிய இரண்டையும் பின்தொடர்கின்றனவோ, எவன் இன்பத்தை அலட்சியம் செய்து, இரு உலகுக்கும் தகுந்த சேவைகளைத் தேர்ந்தெடுக்கிறானோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான்.
தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி முயற்சி செய்பவர்களும், தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திச் செயல்படுபவர்களும், எதையும் முக்கியமற்றதாக அலட்சியம் செய்யாதவர்களும் ஞானி என்று அழைக்கப்படுகிறார்கள்.
விரைந்து புரிந்து கொள்பவனும், பொறுமையாகக் கேட்பவனும், விருப்பத்தால் அல்லாமல் , காரண காரியங்களை அறிந்து கொண்டு தன் நோக்கங்களைத் தொடர்பவனும் , கேட்கப்படாமல் அடுத்தவர் காரியங்களில் தனது மூச்சைக்கூட விடாதவனும், ஞானத்தின் முதன்மையான குறியீட்டைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அடைய முடியாத பொருட்களுக்காக முயற்சிக்காதவர்களும், தொலைந்தவற்றுக்காக வருந்தாமல் இருப்பவர்களும், பேராபத்துக்களுக்கு மத்தியில் இருள் சூழ்ந்த மனத்தால் பாதிக்கப்படாதவர்களும், ஞானம் கொண்ட அறிவினை உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
ஒரு வேலையை ஆரம்பித்த பிறகு அது முடிவடையும் வரை பெருமுயற்சி செய்பவனும், தன் நேரத்தை எப்போதும் வீணாக்காதவனும், தனது ஆன்மாவை கட்டுப்படுத்தி வைத்திருப்பவனும் ஞானிகளாகக் கருதப்படுகின்றனர்.
ஓ! திருதராஷ்டிரரே, ஞானமுள்ளோர் எப்போதும் நேர்மையான செயல்களில் மகிழ்ந்து, மகிழ்ச்சியானதையும், செழிப்பானதையுமே செய்வார்கள், உலகிற்கு எது நன்மையானதோ, அதை அவர்கள் வெறுப்பதில்லை.
கங்கையின் வழியில் இருக்கும் ஒரு தடாகத்தைப் போல, எவன் மரியாதைகளில் மகிழ்ச்சி அடையவில்லையோ, ஏளனங்களுக்காக வருந்துவதில்லையோ, கலங்காமல், குளிர்ச்சியாக நீடிக்கிறானோ, அவனே ஞானி என்று எண்ணப்படுகிறான்.
அனைத்து உயிரினங்களையும் அறிந்தவனும், அனைத்துச் செயல்களின் இணைப்புகளையும் நன்கறிந்தவனும், தங்களது குறிக்கோள்களை அடைய மனிதர்கள் கைக்கொள்ளும் வழிகளைக் குறித்த அறிவில் நிபுணத்துவம் வாய்ந்தவனும், ஞானி என எண்ணப்படுகிறான்.
எவன் துணிவுடன் பேசுகிறானோ, பல்வேறு தலைப்புகளில் உரையாடுகிறானோ, பேச்சுக்கலை அறிவியலை , வாதம் திறம்பட செய்யும் தர்க்க சாஸ்திரத்தை அறிந்தவனும், மேதையாக கருதப்படுபவனும், புனித நூல்களில் உள்ளவற்றுக்குப் பொருளை விளக்கிச் சொல்பவனும் ஞானி என எண்ணப்படுகிறார்கள்.
எவன், காரணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட கல்வியைக் கற்கிறானோ, எவனுடைய காரணங்கள் {கொள்கைகள்} சாத்திரங்களைப் பின்பற்றி வருகிறதோ, நல்லவர்களை மதிப்பதில் எவன் எப்போதும் தவறாதவனாக இருக்கிறோனோ, அவன் ஞானி என்று அழைக்கப்படுகிறான்
அப்போது திருதராஷ்டிரன் இடைமறித்து, " அப்போது எதை நீ மூடத்தனமாக கருதுகிறாய் என கேட்கிறார்?
அதற்கு விதுரர் என்ன விளக்கம் அளித்திருப்பார் அடுத்த பதிவில் காணலாம்.

பதிவு-6
விதுரநீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்
எந்த ஒரு விசயத்தையும் புதியதாக தெரிந்து கொள்ள முயலும் போது , அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். விதுரர் திருதராஷ்டிரனுக்கு கூறிய அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களை உடையவை. பழி பாவங்களிலிருந்து தப்பித்து, தர்மத்தின்படி வாழ்வை நடத்த வேண்டும் என நினைக்கும் யாவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நீதிக் கருத்துக்களை எடுத்துக் கூறுகிறது விதுர நீதி.
சம்சார பந்தம்
ஒருவன், ஒரு பெருங் காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழைய முடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்து போய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவ லட்சணமான - யாவரும் வெறுக்கக் கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக் கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும் போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். அதான் திருமணம் எனும் சம்சார பந்தம்.அது எப்படி இருக்கிறது பார்க்கலாமா?
குடும்ப வாழ்க்கை
கிணற்றுக்குள் விழுந்தவன் நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் தடக் தடக் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்! இனி சந்தோசமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே... அவன் காலடியில் பெரிய பாம்பு( உற்றார் உறவினர்கள் நாக்கு) தலையைத் தூக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தது. தொங்கிக் கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக் கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது.(எதிர்காலம்)
கர்ம வினை
அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க... கரக்... கரக்... என்று சத்தம் கேட்டது. பார்த்தால்... அவன் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக் கொண்டிருந்தன.(பொருளாதார குழப்பம்). இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்... உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்... அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான். என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.
விதுர நீதி கற்பிக்கும் வாழ்க்கை
கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அந்தப் பெண்- முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது.
கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள், நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறு முகங்கள், பன்னிரண்டு கால்கள் உள்ள யானை என்று ஒன்றை பார்தோமே.. அந்த யானை என்பது ஓர் ஆண்டு; ஆறு முகங்கள் என்பது (2 மாதங்களைக் கொண்ட) ஆறு விதமான பருவங்களைக் குறிக்கும்; பன்னிரண்டு கால்கள் என்பது பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும். மனிதன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களை அறுக்கும் கறுப்பு - வெளுப்பு எலிகள், இரவையும் பகலையும் குறிக்கும். இரவும் பகலும் ஆன காலம் நம் வாழ்நாட்களை அரித்துக்கொண்டிருக்கின்றன.
தேன் துளிகள் என்பது காமச்சுவை. பலவிதமான விஷயங்களிலும் ஈடுபட்டு ஏதாவது சந்தோஷம் துளி அளவு கிடைத்தாலும் போதும்; அனைத்தையும் மறந்து விடுகிறான் மனிதன். அதாவது.. தப்பவே முடியாத நோய்கள், முதுமை, காலம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தப்பி விட்டதாக நினைத்து, சின்னஞ் சிறு சந்தோஷங்களில் நம்மை மறந்து இருக்கிறோம். கதை வடிவாகச் சொல்லி இவ்வாறு நம்மை எச்சரிக்கிறது, விதுர நீதி. நீதி நூல்கள் பல இருந்தாலும், அவற்றில் முதலிடம் பிடித்திருப்பது விதுர நீதிதான். அந்த அளவுக்கு மிகவும் உயர்ந்ததான நீதி நூல் இது.

பதிவு - 7
மூடத்தனம் மற்றும் மகிழ்ச்சி
மனங்கலங்கி நின்ற திருதராஷ்டிரனுக்கு ஆறுதல் கூறிய விதுரரிடம் , "எது ஞானம் என கேட்கிறார்? " . விதுரரும் விளக்கமாக கூறுகிறார்.
ஞானத்தை பற்றி கேட்ட திருதராஷ்டிரனுக்கு மூடத்தனம் பற்றியும் சந்தேகம் வந்தது . தான் மூடனோ என்ற சந்தேகமும் நாணமும் ஒரு சேர பற்றிக் கொள்ள , தயக்கத்துடனே எது மூடத்தனம் என்று எனக்கு உணர்த்துவாயாக என வேண்டுகிறார்.
விதுரர் திருதராஷ்டிரனுக்கு கூறிய அறிவுரைகளின் தொகுப்பே இன்றைய பதிவு
மூடத்தனம்
சாத்திரத்தை அறியாமல் வீணானவனும், வறுமையிலும் கர்வத்துடன் இருப்பவனும், தன் நோக்கங்களை அடைய முறையற்ற வழிகளை நாடுபவனும் மூடனாவான்.
தன் சொந்த நோக்கங்களை விட்டு விட்டு, பிறரின் நோக்கங்களில் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்பவனும், நண்பர்கள் காரியங்களில் ஏமாற்று தனத்தைக் கடைப்பிடிப்பவனும் மூடன் என்று அழைக்கப்படுகிறான்.
விரும்பத்தகாத பொருட்களை விரும்புபவனும், நியாயமாக விரும்பத்தக்க பொருட்களை விரும்பாது கைவிடுபவனும் , சக்திவாய்ந்தவர்களிடம் பகை கொள்பவனும், மூட ஆன்மா கொண்டவனாகக் கருதப்படுகிறான்.
தன் எதிரியைத் தனது நண்பனாகக் கருதுபவனும், நண்பனிடம் பகை கொள்பவனும், தீய செயல்கள் செய்பவனும், மூட ஆன்மாக கொண்ட மனிதனாகச் சொல்லப்படுகிறான்.
தனது திட்டங்களை வெளிப்படுத்திக் கொள்பவனும், எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்பவனும், குறுகிய காலமே செய்ய வேண்டியவற்றில் நீண்ட நேரத்தைச் செலவழிப்பவனும் மூடனாவான்.
பித்ருக்களுக்கு சிராத்தம் செய்யாதவனும், தெய்வங்களை வழிபடாதவனும், உன்னத மனம் கொண்ட நண்பர்களைப் பெறாதவனும், மூட ஆன்மா கொண்ட மனிதனாகச் சொல்லப்படுகிறான்.
அழையாத இடத்தில் நுழைபவனும், கேட்கப்படாத போதே அதிகம் பேசுபவனும், நம்பத்தகாத மனிதர்களை நம்புபவனும், மனிதர்களில் இழிந்தவனான மூடனாவான்.
தானே குற்றவாளியாக இருந்து கொண்டு, மற்றவர்கள் மீது பழிபோடுபவனும், தான் சக்தியற்றவனாக இருந்த போதும் கோபத்தை வெளிப்படுத்துபவனும், மனிதர்களிலேயே மிகப்பெரும் முட்டாளாவான்.
தனது சொந்த சக்தியை அறியாமல், அறம் பொருளில் , தர்ம நியமங்களில் இருந்து விலகிச்சென்று, அடைவதற்கு அரிதான பொருளை விரும்பியும் போதுமான வழிவகைகளைக் கைக்கொள்ளாமல் இருப்பவன், அறிவற்றவனாகச் சொல்லப்படுகிறான்.
தன் பலத்தை அறியாமல், அறம், பொருள் இல்லாத அடைய முடியாத பொருளை முயற்சியில்லாமலேயே விரும்புபவன் மூடனாவான்.
தண்டனைக்குத் தகாதவனைத் தண்டிப்பவனும், மனிதர்கள் அறியாமலேயே அவர்களுக்கு அஞ்சலி செலுத்துபவனும், கஞ்சனுக்குச் சேவை செய்பவனும், சிறு புத்தி கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.
ஆனால், மகத்தான செல்வத்தையும், செழிப்பையும் அடைந்திருந்தாலும் அல்லது பூரண கல்வியை அடைந்திருந்தாலும், ஒருவன் செருக்கடையாதிருந்தால், அவன் ஞானி என்று எண்ணப்படுகிறான். அதேபோல ஒருவன் செல்வச்செழிப்பு கொண்டிருந்தாலும், தானே உண்டு, அற்புத ஆடைகளை தானே உடுத்திக் கொண்டு, தன்னை நம்பியிருப்பவர்கள் மத்தியில் தனது செல்வத்தை பகிர்ந்தளிக்காதவனை விட இதயமற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?
ஒருவன் பாவங்களைச் செய்யும்போது, அதன் விளைவுகளின் பயனை அறுவடை செய்பவர்கள் பலராக இருப்பினும், இறுதியில் அந்தக் கனியை அனுபவித்தவர்கள் தீங்கில்லாமல் தப்பித்தாலும், அந்தப் பாவங்கள் அவற்றை செய்தவனை மட்டுமே பாவம் சேரும்.
ஒரு வில்லாளி கணையை அடிக்கும் போது, அவன் ஒரு மனிதனையாவது கொல்வதில் வெல்லவோ வெல்லோமலோ போகலாம், ஆனால், அதில், ஒரு தனிப்பட்ட புத்திசாலி, தனது புத்தியை சுய நலத்தின் நோக்கத்துடன் செலுத்தும்போது, மன்னனோடு கூடிய மொத்த நாட்டையும் அவன் அழித்துவிட நேரும்.
🌺மகிழ்ச்சிக்கு வழி
ஒன்றின் மூலம் இரண்டைப் பகுத்துப் பார்த்து,
மூன்றை, நான்கின் மூலம் அடக்கி,
ஐந்தை வென்று, ஆறை அறிந்து,
ஏழைத் தவிர்த்தால் என்றும் மகிழ்ச்சியாக இருப்பீராக.
அதன் விளக்கம்
அறிவு {புத்தி} என்ற ஒன்றால்,
{1} நன்மை, {2} தீமை என்ற இரண்டைப் பகுத்துப் பார்த்து,
{1} எதிரி, {2} நண்பன், {3} நம்மால் புறக்கணிக்கப்பட்டவன் ஆகிய மூவரையும்,
{1} பேசுதல் {சாம}, {2} மிரட்டுதல் {பேத}, {3}கொடுத்தல் {தான}, {4} தண்டித்தல் {தண்டம்} ஆகிய நான்கால் அடக்க வேண்டும் .
{1} கண், {2} காது, {3} மூக்கு, {4} நாக்கு, {5} உடல் {தோல்} ஆகிய ஐம்பொறிகளையும் வென்று,
{1} நட்பு {சந்தி}, {2} பகை {விக்கிரகம்}, {3} செலவு {யானம்}, {4} இருக்கை {ஆசனம்}, {5} பிரிதல் {துவைதம்}, {6} கூட்டல் {ஆச்சிரயம்} ஆகிய ஆறு குணங்களை அறிந்து,
{1} பெண், {2} சூது, {3} வேட்டை, {4} மது, {5} கடுஞ்சொல், {6} கடுந்தண்டனை, {7} பொருள் விரயம் ஆகிய ஏழையும் தவிர்த்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பது பொருள்.
செய்ய கூடாத செயல்கள்
நஞ்சு ஒருவனேயே கொல்லும், ஆயுதமும் ஒருவனையே கொல்லும், ஆனால் தீய ஆலோசனைகள் மன்னனையும், குடிமக்களையும், மொத்த நாட்டையுமே அழித்துவிடும்.
ஒருவன் சுவைமிக்க உணவு எதையும் தனியாக உண்ணக்கூடாது, பொருள் ஆதாயம் சம்பந்தமான காரியங்களில் தனியாக ஆலோசிக்கக்கூடாது, தனியாக பயணத்தை மேற்கொள்ளக் கூடாது, உறங்கும் தோழர்களுக்கு மத்தியில் தனியாக விழித்திருக்ககூடாது. ஓ! மன்னா, உம்மால் புரிந்து கொள்ள முடியாத, இரண்டற்ற ஒன்று உண்மையே {சத்தியமே}. கடலில் படகைப் போன்று அதுவே {உண்மை}, சொர்க்கத்திற்கு வழியாக இருக்கிறது.
மன்னிக்கும் இயல்பும் மகிழ்ச்சியும்
மன்னிக்கும் இயல்புடைய மனிதர்களுக்கு ஒரே குறை மட்டுமே உள்ளது, மன்னிக்கும் இயல்புடைய மனிதனை, மக்கள் பலமற்றவன் என்று நினைக்கிறார்கள். அதுவே அந்தக் குறை. எனினும், அந்தக் குறையைக் கருத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மன்னிக்கும் இயல்பே பெரும் சக்தியாகும். மன்னிக்கும் இயல்பு {பொறுமை}, பலமற்றவர்களுக்கு அறமும், பலவான்களுக்கு ஆபரணமும் ஆகும்.
சக்தியற்றவர்களுக்கு பொறுமை குணமாகிறது. சக்தியுள்ளவர்களுக்கு அதுவே அலங்காரமாகும்.
மன்னிக்கும் இயல்பே இவ்வுலகில் அனைத்தையும் வெல்லும்; மன்னிக்கும் இயல்பால் பொறுமையால் அடைய முடியாது என்ன தான் இருக்கிறது?
எவனுடைய கையில் மன்னிப்பு எனும் ஆயுதம் இருக்கிறதோ, அந்த மனிதனைத் தீய மனிதர்களால் என்ன செய்து விட முடியும்? காய்ந்த புற்களற்ற நிலத்தில் விழும் நெருப்பு தானே அணைந்துவிடுகிறது.
மன்னிக்க தெரியாத மனிதன் பெருங்கொடுமை செய்து தன்னைத் தானே கறைப்படுத்திக் கொள்கிறான்.
நீதியே ஒரே உயர்ந்த நன்மை; மன்னிக்கும் இயல்பே {பொறுமையே} ஒரே உச்சபட்ச அமைதி; அறிவே ஒரே உச்சபட்ச மனநிறைவு; மனிதாபிமானமே என்றும் மனதிற்கு மாறாத மகிழ்ச்சியுமாகும். 
பதிவு - 8
மகிழ்வான வாழ்வுக்கு வழி
இறைவன் வழங்கிய அறிவு சிலருக்கு ஞானமாக, சிலருக்கு மூடத்தனமாக எப்படி உபயோகப்படுத்த படுகிறது என்பதை கடந்த பதிவில் பார்த்தோம்.
“ இறைவன் வழங்கிய அறிவை கொண்டு நன்மை , தீமை எப்படி பகுத்துப் பார்த்து, வாழத் தகுந்த சூழ்நிலையை தேர்ந்தெடுத்து ஐம்புலன்களையும் அடக்கி , நல்ல குணாதிசியங்களை வளர்த்துக் கொண்டு, தேவையானவற்றை பெற்று, தேவையற்றதை ஒதுக்கி எவ்வாறு மகிழ்வாக வாழலாம் ” என்று விதுரர் கூறுகிறார் என்பதை இன்றைய பதிவில் காணலாம்
இரண்டானவை - நல்லது கெட்டது தெரிதல்
“போரிடத் திறனற்ற மன்னன், புனித இடங்களுக்குப் பயணம் போகாத அந்தணன் ஆகிய இருவரையும் பொந்துகளில் வாழும் விலங்குகளை {எலிகளை} ஒரு பாம்பு விழுங்குவதுபோல, இந்தப் பூமி விழுங்கிவிடும்.
கடுஞ்சொல் தவிர்ப்பது, தீயவற்றைப் புறக்கணிப்பது ஆகிய இரண்டையும் செய்வதால் ஒரு மனிதன் உலகில் புகழடைகிறான்.
தங்கள் பாலினத்தைச் சேர்ந்த பெண்கள் தன் மேல் ஆண்கள் ஆசை கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, வெறுமனே ஆண்களை விரும்பும் பெண்களும், பிறரால் ஒருவர் வழிபடப்படுகிறார் என்பதற்காக, வெறுமனே மற்றவரை வழிபடும் ஒருவன் ஆகிய இருவரும் தங்களுக்கென்று சுய விருப்பம் இல்லாதவர்கள் ஆவார்கள். அவர்கள் வாழ்வில் எவ்வித நலனும் இல்லை.
ஏழையின் ஆசைகள், சக்தியற்றவன் கோபம் ஆகிய இரண்டும், உடலை வருத்தும் கூரிய முட்களைப் போன்றனவாகும். முயற்சியற்ற இல்லறத்தான், தீய வேலைகள் கொண்ட சந்நியாசி ஆகிய இருவரும் தங்களுடைய பொருந்தாச் செயல்களால் ஒளிருவதேயில்லை.
மன்னிக்கும் தன்மையோடிருக்கும் சக்திமிக்க மனிதன், ஈகை குணம் கொண்ட ஏழை ஆகிய இருவரும், சொர்க்கத்தைவிட உயர்ந்த பகுதியில் வாழ்வது போல, இவ்வுலகில் வாழ்வார்கள்.
நியாயமாக அடைந்த பொருட்களிலிருந்து தகுதியற்றவர்களுக்கு அளிக்கப்படும் கொடை, தகுந்தவர்களுக்கு மறுக்கப்படும் கொடை ஆகிய இரண்டும் தவறான பயன்பாடு கொண்டவை என்றே கருத வேண்டும்.
தானமளிக்காத செல்வந்தன், ஆணவம் கொண்ட ஏழை ஆகிய இருவரையும், கழுத்தில் பாரமிக்க கற்களைக் கட்டி நீருக்குள் எறிய வேண்டும்.
யோகத்தில் சாதித்த சந்நியாசி வெளிப்படையாக போரில் கொல்லப்பட்ட வீரன், ஆகிய இருவரும், சொர்க்கத்திற்கு வழியாக இருக்கக்கூடிய சூரியனையே துளைத்துவிடக் கூடியவர்களாவர். அவர்கள் இறந்தும் வாழும் பேறு பெற்றவர்கள்.
மூன்று ~ வாழ்க்கையில் நம்மோடு இருப்பவர்களை தேர்ந்தெடுக்கும் திறன்
வேதங்களை நன்கறிந்தவர்கள், மனிதர்களின் வழிகள் நன்மை [1], மத்திமம் [2], தீயவை [3] என்பவற்றைச் சார்ந்தவை {மூன்றானவை} என்று சொல்லியிருக்கின்றனர்.
, மனிதர்கள் [1]நல்லவர்களாகவும், [2]அக்கறையற்றவர்களாகவும், [3]தீயவர்களாகவும் {மூன்று வகையிலேயே} இருக்கின்றனர். எனவே, அவரவருக்குப் பொருந்தும் வகையிலான வேலைகளில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்.
[1]மனைவி, [2]அடிமை, [3]மகன் ஆகிய மூவரும் தங்களுக்கு என்று சொத்து வைத்துக் கொள்ள முடியாது. அவர்களால் ஈட்டப்படும் அனைத்தும், அவர்களை உரியவர்களுக்கே சொந்தமாகும்.
[1]பிறர் பொருளைத் திருடுதல்,
[2]பிறர் மனைவி மீது மோகம் கொள்ளுதல், [3]நண்பனை மீறுதல் ஆகிய மூன்று குற்றங்களில் இருந்தும் பெரும் அச்சம் எழுகிறது.
ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும்
[1]காமம், [2]கோபம், [3]பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் வாயில்களாகும். எனவே, அனைவரும் இவற்றைத் {காமம், கோபம், பேராசை ஆகியவற்றைத்} துறக்க வேண்டும்.
பேராபத்தில் இருக்கும்போது கூட, [1]தொண்டன், [2]“நான் உன்னிடம் சரண் ” என்று சொல்லி உம் பாதுகாப்பை நாடும் ஒருவன், [3]உமது வசிப்பிடத்திற்கு வந்த ஒருவன் ஆகிய மூவரையும் கைவிடக்கூடாது.
[1]வரம் அளிப்பது, [2]மன்னனாவது, [3]மகனைப் பெறுவது ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கணக்கில் எடுத்தாலும் ஆபத்திலிருக்கும் எதிரியை விடுவிப்பதே [4] தகுதியில் பெரியதாகும்.
{நான்கானவை} - வாழ்வில் செய்யக் கூடாதவை
ஒரு மன்னன் சக்திமிக்கவனாக இருப்பினும், [1]சிறுபுத்தி கொண்டோர், [2]காலந்தாழ்த்துவோர், [3]சோம்பேறி, [4]மேற்புகழ்ச்சி {முகத்துதி} செய்வோர் ஆகிய நான்கு பேரிடம் ஒருபோதும் ஆலோசனை செய்யக்கூடாது.
செல்வ செழிப்பால் மகுடம் சூட்டப்பட்டு இல்லற வாழ்வு வாழ்பவனிடம்,
[1]இரத்த உறவு கொண்ட முதியவர்கள், [2]உறவினர்கள்,
[3]வறுமையில் விழுந்த உயர் பிறப்பாளர்கள், [4]ஏழை நண்பர்கள் மற்றும் பிள்ளையற்ற சகோதரிகள் ஆகிய நால்வரையும் வசிக்கச் செய்ய வேண்டும்.
தேவர்கள் தலைவனால் {இந்திரனால்}
எவை உடனே பலிக்கும் பிருஹஸ்பதியிடம் கேட்கப்பட்ட போது, “ தேவர்கள் தீர்மானம், அறிவார்ந்தவர்களின் புரிதல்கள் கற்றோரின் பணிவு, பாவிகளின் அழிவு ஆகிய நான்கும் ஒரே நாளில் நிகழகூடியதும், உடனே பலனளிக்கக்கூடிய திறம் கொண்டவை .அவை நான்கும் உடனே பலிக்கும் ,”என்று பதிலளித்தார். செயல் திறன், புரிந்து கொள்ளும் தன்மை, பணிவு, இவை மூன்றையும் செயல்படுத்தும் திறன் கொண்டவர்கள் முயற்சி என்றும் வெற்றியே
அச்சத்தை விலக்கவல்லவைகளான [1]அக்னி ஹோத்ரம், [2]பேசாநோன்பு {மௌன விரதம்}, [3]கல்வி மற்றும் [4](பொதுவான) வேள்வி ஆகிய நான்கும், முறையற்ற வகையில் செய்யப்பட்டால், அவை அச்சத்தையே தரும்.
வாழ்வுக்கு வலு தரும் ஐந்து
தந்தை, தாய், நெருப்பு {அக்னி}, ஆன்மா, குரு ஆகிய ஐந்து நெருப்புகளும் ஒரு மனிதனால் மரியாதையுடன் வழிபடப்பட வேண்டியவை.
தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள், பிச்சைக்காரர்கள், விருந்தினர்கள் ஆகிய ஐவருக்குச் சேவையாற்றுவதால் ஒரு மனிதன் இவ்வுலகில் பெரும்புகழை அடைகிறான்.
நண்பர்கள், எதிரிகள், பாகுபாடற்றவர்கள், நம்மைச் சார்ந்து இருப்பவர்கள், நம்மைப் பராமரிக்க உரிமையுள்ளவர்கள் ஆகிய ஐயவர், நீர் எங்கே சென்றாலும் உம்மைத் தொடர்வார்கள்.
கண், காது, மூக்கு, நாக்கு, உடல் [தோல்] ஆகிய ஐம்பொறிகளில் ஒரு பொறி ஓட்டையானால்கூட , தோலால் செய்யப்பட்ட ஓட்டைப் பாத்திரத்தில் இருந்து நீர் ஒழுகுவது போல, ஒருவனுடைய அறிவு அதன் {அந்தப் பொறியின் குறைபாடு} வழியாக வெளியே நழுவிவிடும். எவ்வளவு ஞானம் பெற்று இருந்தாலும் அதனால் பயன் இல்லை.
வாழ்வில் தவிர்க்க வேண்டிய ஆறு
உறக்கம், அயர்வு {தூக்கக் கலக்கம்}, அச்சம், கோபம், சோம்பல், காலதாமதம் ஆகிய ஆறு குறைகளையும் செழிப்பை அடைய விரும்பும் மனிதன் தவிர்க்க வேண்டும்.
சாத்திரங்களுக்கு விளக்கமளிக்க இயலாத குரு, கல்லாத புரோகிதர், பாதுகாக்க இயலாத மன்னன், இனிமையற்ற வார்த்தைகள் பேசும் மனைவி, வயலுக்குச் செல்ல விரும்பா மாட்டு மந்தையாளன் , காட்டுக்காக கிராமத்தை துறக்க விரும்பும் நாவிதர் ஆகிய அறுவரையும் உடைந்த படகை கடலில் தள்ளுவது போலத் துறக்க வேண்டும்.
உண்மை, ஈகை {தானமளித்தல்}, விடாமுயற்சி {தளர்விலா உழைப்பு}, இரக்கம், மன்னிக்கும் மனநிலை, பொறுமை ஆகிய ஆறு குணங்களையும் ஒரு மனிதன் ஒருபோதும் விடக்கூடாது.
பசுக்கள், தொண்டு, உழவு {விவசாயம்}, மனைவி, கல்வி, சூத்திரனின் செல்வம் ஆகிய ஆறும் புறக்கணிக்கப்பட்டால் உடனே அழிந்து விடும்.
(1)கல்வி கற்ற சீடர்கள் தங்கள் குருக்களையும்; (2)மணமானவர்கள் தங்கள் அன்னையரையும்; (3)விருப்பங்கள் ஈடேறியவர்கள் பெண்களையும் ,
(4) வெற்றியடைந்தவர்கள் உதவி செய்தவர்களையும்; (5)ஆற்றைக் கடந்தவர்கள், தங்களைச் சுமந்த படகையும்,
(6) பிணி குணமான நோயாளிகள், மருத்துவர்களையும் என இந்த ஆறு பேரும், தங்களுக்குக் கடமையாற்றியவர்களை மறந்து போனால் அதன் பின் தகுந்த உதவியாளனை துணையை பெறுதல் அரிது.
மகிழ்ச்சிக்கான ஆறு
உடல்நலன், கடன்படாநிலை, சொந்த வீட்டில் வாழ்தல் , நன்மனிதர்களின் துணை, வாழ்வாதாரங்களுக்கான வழிகளில் உறுதி, எதற்கும் பயப்படாமல் நேர்மையாக இருத்தல் ஆகிய ஆறும், ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.
பொறாமையுள்ளோர், அருவருப்புள்ளோர், மனநிறைவற்றோர், கோபமுள்ளோர், எப்போதும் சந்தேகமுள்ளோர், பிறரின் நற்பேறைச் சார்ந்து இருப்போர் ஆகிய ஆறு பேரும் எப்போதும் பரிதாப நிலையிலேயே துக்கமாக இருப்பர்.அவர்களை திருப்தி படுத்துதல் இயலாது.
செல்வத்தை அடைதல், தடையற்ற உடல் நலன், இனிய பேச்சுடைய அன்பிற்குரிய மனைவி, கீழ்ப்படியும் மகன், இலாபகரமான அறிவு {செல்வம் ஈட்டக்கூடிய திறமை} ஆகிய ஆறையும் கொண்ட மனிதர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மனித இதயத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும் காமம், கோபம், பேராசை, மோகம், வெறி, பொறாமை ஆகிய ஆறையும் அடக்கியவன், தனது ஐம்புலன்களையும் வென்று, எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை. எனவே, அவன் எப்போதும் ஆபத்துகளுக்கு இடம் கொடுப்பதில்லை.
#திருடர்கள், பொறுப்பற்றவர்களாலும், #மருத்துவர்கள், நோயாளிகளாலும், #வேசிபெண்கள், காமத்தால் பாதிக்கப்பட்டவர்களாலும்,
#புரோகிதர்கள், வேள்வி செய்பவர்களாலும், #மன்னன், சண்டையிடுபவர்களாலும், கடைசியாக, #கற்றோர், கல்லாதோராலும் என இந்த அறுவரும் மற்ற அறுவரின் தேவைகளால் வாழ்கின்றனர்.
ஏழானவை - தீமைகள்
உறுதியாக நிறுவப்பட்ட ஏகாதிபதிகளுக்குக் கூட அழிவை ஏற்படுத்தக் கூடியவையும், துயரத்தைத் அளிக்கக்கூடியவையுமான, பெண்கள், பகடை, வேட்டை, மது, கடுஞ்சொல், கடுந்தண்டனை, செல்வத்தை வீணடித்தல் ஆகிய ஏழு தீமைகளை ஒரு மன்னன் கைவிட வேண்டும்.
அந்தணர்களுடன் வரம்பு மீறல்
அந்தணர்களை வெறுப்பது, அந்தணர்களுடன் சச்சரவு, அந்தணர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்வது, அந்தணனின் உயிரைப் பறிப்பது, அந்தணர்களை நிந்திப்பதில் இன்பம் கொள்வது, அந்தணர்களின் புகழைக் கேட்டு வருந்துவது, {அறச்} சடங்குகளில் அவர்களை {அந்தணர்களை} மறப்பது, அவர்கள் {அந்தணர்கள்} எதையும் கேட்கும் போது, அவர்களைப் பழிவாங்குவது ஆகிய எட்டும் அழிவடைய விதிக்கப்பட்ட மனிதனின் உடனடி அறிகுறிகளாகும். அறிவுடைய மனிதன் இந்த வரம்புமீறல்களை அறிந்து கொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மனிதனால் பெற கூடிய 8 நன்மைகள்
நண்பர்களுடன் சந்திப்பு, அபரிமிதமான செல்வத்தை அடைவது, மகனின் அணைப்பு, கலவி, சரியான நேரங்களில் நண்பர்களுடன் உரையாடல், தன் தரப்பைச் சார்ந்த மனிதரின் முன்னேற்றம் , விரும்பியதை அடைவது, சமூகத்தில் மரியாதை ஆகிய எட்டும் வாழ்வில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியின் சாரமேயாகும், இவை யாவையும் ஒருவனால் இங்கே {இவ்வுலகில்} மட்டுமே அடைய முடியும்.
அறிவு, உயர்பிறப்பு, தன்னடக்கம், கல்வி, ஆற்றல், நிதானமான பேச்சு, தன் சக்திக்குத் தக்க கொடை, செய்நன்றி அறிதல் ஆகிய எட்டு குணங்களும் ஒரு மனிதனைப் புகழடையச் செய்கின்றன.
வாழ்க்கை தத்துவம் ஒன்பது
இந்த வீட்டுக்கு ஒன்பது வாயில்கள், மூன்று தூண்கள் மற்றும் ஐந்து சாட்சிகளாகும். அது ஆன்மாவால் நிரம்பியிருக்கிறது. இவையனைத்தையும் உண்மையில் அறிந்த ஞானமுள்ளவனே {கல்வி} கற்றவனாவான். [
அதாவது, மூச்சு விடும் செயல்பாட்டில் இடகலை {இளை}, பிங்கலை {பிங்களை}, சுழிமுனை {சூஷுமனை} எனும் மூன்று தூண்களில் நிற்கும் வீடான இந்த உடலுக்கு இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்கு துவாரங்கள், ஒரு வாய், ஆசனவாய், குறி ஆகிய ஒன்பது ஓட்டைகள் என்ற வாயில்களும், ஐம்பொறிகள் அந்த வீட்டில் வசித்து செயல்படுபவையாக - சாட்சிகளாக இருக்கின்றன. உடலாகிய அந்த வீட்டில் ஆன்மா என்ற தலைவன் வசிக்கிறான். அதை உண்மையில் அறிந்து தன்னை உணர்ந்து வாழ்பவனே கல்விமானாவான் .அவனுக்கு வாழும் நாள் வரை துன்பம் என்பது இல்லை என்கிறார் விதுரர்.
சஞ்சையன் முடிவால் மனம் கலங்கிய திருதராஷ்டிரனுக்கு , மகிழ்வுடன் வாழ என்ன வழி? என விதுரர் கூறிய கருத்துக்களை இன்று பார்த்தோம்.
அடுத்த பதிவில் “ மகிழ்வுள்ள மனிதன் எப்போது எல்லோராலும் விரும்பப் படுவான்” என்ற திருதராஷ்டிரன் கேள்விக்கு விதுரர் என்ன விளக்கம் கூறுகிறார் என்பதை காணலாம். 

பதிவு – 9
நல்ல மனிதன் மற்றும் நல்ல மன்னனுக்குரிய குணங்கள் அவர்களை எவ்வாறு மகிழ்வாக வைத்திருக்கின்றன ?
இறைவன் வழங்கிய அறிவை கொண்டு நன்மை , தீமை எப்படி பகுத்துப் பார்த்து, வாழத் தகுந்த சூழ்நிலையை தேர்ந்தெடுத்து ஐம்புலன்களையும் அடக்கி , நல்ல குணாதிசியங்களை வளர்த்துக் கொண்டு, தேவையானவற்றை பெற்று, தேவையற்றதை ஒதுக்கி எவ்வாறு மகிழ்வாக வாழலாம் என்று கடந்த பதிவில் விதுரர் கூறியதை பார்த்தோம் .அதன் தொடர்ச்சி
அறம் அறியாதவர்கள்
1.போதையில் இருப்பவன்,
2.கவனம் குறைந்தவன்,
3.உளறுபவன்,
4.களைப்பாக இருப்பவன்,
5.கோபம் கொண்டவன்,
6.பசியோடு இருப்பவன்,
7.அவசரப்படுபவன்,
8.பேராசை கொண்டவன்,
9.பயம் கொண்டவன்,
10.காமம் கொண்டவன்
ஆகிய பத்து பேரும் அறம் எது , தர்மம் எது என்பதை அறிய மாட்டார்கள்..
நல்ல மன்னனுக்கு உரிய குணங்கள்
காமத்தையும், கோபத்தையும் துறந்து, தகுந்தவனுக்குச் செல்வத்தை அளித்து, பாகுபாட்டை அறிந்து, கல்வி கற்று, சுறுசுறுப்பாக இருக்கும் மன்னனே அனைத்து மனிதர்களையும் நிர்வாகம் செய்யும் அதிகாரியாகக் கருதப்படுகிறான். பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்பவனும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளிப்பவனும், தண்டனையின் சரியான அளவை அறிந்தவனும், கருணை எப்போது காட்டப்பட வேண்டும் என்பதையும் அறிந்த நிர்வாகியே நல்ல மன்னனாக கருதபடுகிறான் .
பலமற்ற எதிரியைக் கூட அலட்சியம் செய்யாதவனும், எதிரியைப் பொறுத்த மட்டில் சந்தர்ப்பத்திற்காக ஆவலாகக் காத்திருந்து புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனும்; தன்னைவிட பலமான மனிதர்களிடம் பகைமையை விரும்பாதவனும்; சரியான நேரத்தில் ஆற்றலை வெளிப்படுத்தம் மன்னனும் சிறந்த வீரனாவான் .ஏற்கனவே வந்துவிட்ட துயரத்துக்காக வருந்தாதவனும், தனது அனைத்துப் புலனங்களையும் குவியச் செய்து முயற்சிப்பவனும், துயரமான காலத்தைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனுமாகிய மன்னனே நிச்சயமாக மனிதர்களில் முதன்மையானவன் ஆவன். அவனது எதிரிகள் அனைவரும் அவனால் என்றாவது ஒரு நாள் வீழ்த்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.
நல்ல மனிதனுக்குரிய குணங்கள்
பயனில்லாத நம்பிக்கையுடன் வாழ்வைக் கழிக்காதவனும், பாவிகளுடன் நட்பு கொள்ளாதவனும், அடுத்தவன் மனைவியை மனதாலும் எண்ணாதவனும், ஆணவத்தைக் காட்டாதவனும், திருடாதவனும், நன்றி மறக்காதவனும், குடியில் ஈடுபடாதவனும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆணவத்தால் மனித மனதின் மூன்று நோக்கங்களை அடைய முயலாதவனும் கேட்கப்படும் போது தடுமாறமால் தைரியமாக உண்மையைச் சொல்பவனும், நண்பர்களுக்காகக் கூட சச்சரவு செய்யாதவனும், அலட்சியப்படுத்தப் பட்டாலும் கோபம் கொள்ளாதவனும் நல்ல மனிதன் என்று கருதப்ப்படுகிறான்.
பிறருக்கு இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவனும், அனைவரிடமும் அன்பாக இருபவனும், பலமற்றவனாக இருப்பின் பிறருடன் பூசல் கொள்ளாதவனும், ஆணவமாகப் பேசாதவனும், சச்சரவை மறப்பவனும், எங்கும் புகழப்படும் நல்ல மனிதனாகிறான் .
கர்வம் கொண்ட முகத்தை எப்போதும் கொள்ளாதவனும், பிறரைக் கண்டித்து, தன்னைப் புகழாதவனும், தான் பெற வேண்டியவற்றுக்காக பிறரிடம் எப்போதும் கடுஞ்சொல் பேசாதவனும் அனைவராலும் எப்போதும் விரும்பப்படுவான். பழைய பகைமை வளர்க்காதவனும், ஆணவத்துடனோ, மிகுந்த பணிவுடனோ நடந்து கொள்ளாதவனும், துயரத்தில் இருக்கும்போதும் முறையற்ற செயலைச் செய்யாதவனும், நன்னடத்தையுள்ளவன் என்று மரியாதைக்குரிய சான்றோர்களால் கருதப்படுகிறான்.
தனது மகிழ்ச்சியில் மிகவும் மகிழாதவனும், அடுத்தவர் துயரைக்கண்டு மகிழாதவனும், கொடையளித்துவிட்டு அதற்காக வருந்தாதவனும், நல்ல இயல்பும் நடத்தையும் கொண்ட மனிதன் எனச் சொல்லப்படுகிறான். பல்வேறு நாடுகளின் சடங்குகளில் ஞானத்தை அடைய விரும்புபவனும், பல்வேறு நாடுகளின் மொழிகளை அறிய விரும்புபவனும், பல்வேறு வகைகளிலான மனிதர்களின் பயன்பாடுகளை அறிய விரும்புபவனும், ஏற்றத்தாழ்வு அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன், அவன் எங்கே சென்றாலும், மகிழ்ச்சியாக இருப்பவர்களை விட அதிக மகிழ்ச்சியடைவது நிச்சயம்.
ஆணவம் , மடமை, ,மரியாதையற்ற செயல்பாடு , துடுக்குத்தனம், பாவச்செயல்கள், மன்னனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது, நடத்தையில் கோணல், பலருடன் பகைமை, குடிகாரர்கள், பைத்தியக்காரர்கள், தீயவர்கள் ஆகியோருடன் சச்சரவு ஆகியவற்றை விட்டுவிடும் புத்திசாலி மனிதன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான். தன்னடக்கம், தூய்மை, நல்ல சடங்குகள், தேவர்களை வழிபடுதல், பரிகார விழாக்கள் மற்றும் உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் பிற சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆகியவற்றைத் தினமும் கடைபிடிக்கும் , பயிலும் , மற்றோருக்கு கற்று தரும் மனிதனுக்கு தேவர்களே நேரில் காட்சியளித்து வேண்டுவன அளிக்கின்றனர்.
யாரிடமிருந்து துயரம் விலகி நிற்கும்
தாழ்ந்தவர்களோடு அல்லாமல் சம நிலை உள்ள மனிதர்களிடம் நல்ல உறவு கொள்பவனும், தன் முன் மேம்பட்ட தகுதியுடையவர்களை தகுந்த இடத்தில் அமர்த்துபவனும், சம நிலை மனிதர்களுடன் பேச்சும், நடத்தையும், நட்பும் பழக்கமும் கொள்பவனுமான கற்றறிந்த மனிதனை துயரங்கள் அணுகுவதில்லை
தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்து விட்டு மிதமாக உண்பவனும், அளவற்ற வேலைகளைச் செய்துவிட்டு மிதமாக உறங்குபவனும், யாசிக்கப்பட்டால் எதிரிகளுக்கும் தானம் அளிப்பவனும், தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வான். அவனிடம் இருந்து துயரங்கள் விலகி நிற்கின்றன.
யாருடைய ஆலோசனைகள் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ , நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறதோ, எவனுடைய செயல்களின் விளைவுகள் பிற மனிதர்களைக் காயப்படுத்துவதில்லையோ, அவன், தனது சிறு நோக்கங்களை அடைவதில் கூட வெற்றியாளனாகவே இருப்பான். அனைத்து உயிர்களுக்கு தீங்கிழையாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டவனும், உண்மையுள்ளவனும், மென்மையானவனும், ஈகை குணம் கொண்டவனும், தூய மனம் கொண்டவனும், அற்புதமான சுரங்கத்தைத் தோற்றுவாயாகக் கொண்ட விலைமதிப்பற்ற ரத்தினத்தின் தூய கதிர் போல, தன் உறவினர்களுக்கு மத்தியில் பெரும் ஒளியுடன் ஒளிர்வான். அவனை எப்போதும் துன்பங்கள் அணுகுவதில்லை .
தன்னைத்தவிர வேறு யாருக்கும் தனது குற்றங்கள் அறியப்படாமல் இருந்தாலும், அக்குற்றங்களுக்காக வெட்கப்படுபவன், அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுகிறான். தூய இதயத்துடனும், அளவிலா சக்தியுடனும், சித்தத்தில் நிலை பெற்றும் இருப்பவன் தனது சக்தியின் விளைவாக சூரியனைப் போலவே ஒளிர்கிறான். அவனை எப்போதும் துன்பங்கள் அணுகுவதில்லை.
அப்போது திருதராஷ்டிரர் விதுரரிடம் ,
“ நல்ல மனிதனுக்கும் மன்னனுக்கும் உரிய குணங்களை கூறினாய் .அதனால் அவர்கள் எவ்வாறு துன்பங்கள் அணுகாமல் மகிழ்வாக வாழ்கிறார்கள் என்றும் கூறினாய் , தர்மவானே!! எனக்குள் உள்ள நல்ல மனிதனின் குணங்களை நான் எப்படி அறிந்து கொள்வது ? ” என்று கேட்டார்.
அவருக்கு விதுரர் என்ன பதிலளித்து இருப்பார் ? நமக்குள் உள்ள நல்ல மனிதர்களின் குணங்களை எப்படி நாம் தன்னை தானே அறிந்து தெரிந்து கொள்வது ? அடுத்த பதிவில் பார்க்கலாம் .
என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி