சித்த மருந்துகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, உலோகங்கள்(Metals), உபரசங்கள், தாதுஉப்புக்கள், நவமணிகள்(Nine gems), பஞ்சசூதப் பாசாணங்கள், மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் இன்று Maggi-யில் அதிக அளவில் இருப்பதாகக்கூறி தடைசெய்யப்பட்டுள்ள ‘காரீயம்’(Lead) கூட ஒரு மருந்துச் சரக்காக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பாசாணங்கள் என எடுத்துக்கொண்டால் (Arsenic Compound), கந்தகம்(Sulphur), வெள்ளைப் பாசாணம்(White Arsenic), மிர்தார் சிங்கி, வீரம், மயில் துத்தம், அப்பிரகம், துருசு போன்ற 64 வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் 120 வகையான உபரசங்கள் (Secondary Minarals) சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக சொல்லவேண்டுமானால் பூநாகம், வெள்ளைக்கல், நிமிளை, கல்மதம், அன்னபேதி போன்றவற்றைக் கூறலாம்.
மேலும் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துச் சரக்குகளான ரசம்(Mercury), ரசசெந்தூரம், இலிங்கம், பூரம், வீரம்(hydrargyrum Perchloride) போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம்தான் என இத்தனை நாள் நினைத்திருந்தோமே இவ்வளவு வேதிப்பொருட்கள் சேர்த்துத்தான் சித்த மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்றால் (Chemicals), அது பக்க விளைவை ஏற்படுத்தாதா?, அவை பாதுகாப்பானதா? என நீங்கள் யோசிக்கலாம்.
நிச்சயம் பாதுகாப்பானதுதான். ஏனென்றால் ஒவ்வொரு மருந்துச் சரக்கையும் (Raw Drug) பயன்படுத்துவதற்குமுன் அது சுத்தி(Purification) செய்யப்படுகிறது.
அதாவது அதிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கான செயல்முறைதான் சுத்தி எனப்படுகிறது.
ஒவ்வொரு சரக்கிற்கும் பல்வேறு சுத்தி முறைகளை சித்த மருத்துவ முன்னோடிகள் கூறிச்சென்றுள்ளனர்.
உதாரணத்திற்கு இன்று ‘Maggi’-யில்அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் Lead என்ற காரீயத்தின் சுத்தி முறையை மட்டும் கூறுகிறேன். ஐவேலிச் சமூலச்சாறு, அதாவது Diplocyclos Palmatus என்ற தாவரத்தின் சாற்றினை பயன்படுத்தி காரீயத்தை சுத்தி கொள்ளலாம்.
மேலும் நொச்சி சாற்றினைப் பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம். மேலும் வெள்ளாட்டின் சிறுநீர் மற்றும் பிரண்டையை பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம்.
இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன. அவற்றைத்தான் நாங்கள் நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.
எனவே சித்த மருத்துவம் என்பது ஏதோ ஒரு மூலிகையை உணவாக பயன்படுத்தி நோயை நீக்குகின்ற மருத்துவ முறை அல்ல.
ஆக, சித்த மருந்துகள் மூலிகை மருந்துகள்(Herbal Medicine) அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கிய மருந்துகள்(Herbo mineral).
இவை மட்டுமல்லாது உயிரினங்களிலிருந்தும் மருந்துச் சரக்குகளை பயன்படுத்துகிறது சித்த மருத்துவம்.
சித்த மருத்துவத்தின் உண்மை வீரியம் இப்படி கடல் அளவு இருக்கும் பொழுது, கடற்கரையில் கிடக்கும் சிப்பியை மட்டும் பார்த்து இதுதான் கடலில் இருக்கிறது என்பது போல, ஒரு சில மூலிகைகளை மட்டும் கொண்டு செய்யும் மூலிகை மருந்துகளே சித்த மருத்துவம் என்பது போன்ற கருத்துக்களை மாற்றுவதற்கே இந்தக் கட்டுரை.
இன்னும் சித்த மருத்துவத்தைப் பற்றிய சரியான அறிமுகம் தொடரும்.
மேலும் தொடர்புக்கு:
Dr.ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
Doctors Plazza,
Opposite to Saravana Stores,
Near Velachery busstand,
Velachery, Chennai.
Ph.No: 9444317293
No comments:
Post a Comment