Monday 10 September 2018

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ யோக ரகசியங்கள்(பகுதி-10)

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ யோக ரகசியங்கள்(பகுதி-10)*
*********************************************
**********************
*(நன்றி அண்ணாமலை சுகுமாரன் ஐயா...)*
அதிகாரம் 4 = நாடி தாரணை
*******************************
35) ஆதித்தன் தன கதிர் போல அந்தநாடிகள்
பேதித்துத் தாம் பரந்தவாறு
ஆதித்தன் தன கதிர்களை நீக்கமற இந்த அகிலம் எங்கும்
பரப்புவது போல நாடிகளும் , பிராணன் எனும் உயிராற்றலை நமது உடலெங்கும் பரப்பி செயல்படுகிறது என்கிறார் . சூரியன் மையமாக நின்று ,தன கதிர்களால் கோள்கள் அனைத்தையும் இயக்குவது போல , உடலின் உயிர் ஆற்றல் நாடிகளில் தச நாடிகள் மற்றும் 72,000 நாடிகள் வழியே பரவி உடலின் அத்தனை உறுப்புக்களையும் இயக்குகிறது .
அண்டத்தில் இருப்பதே இந்த பிண்டத்திலும் இருக்கிறது .
அண்டம் இயங்குவது போலவே இந்த பிண்டமும் இயங்குகிறது .
நாடிகளை பற்றி யூகிமுனிவர் ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளாரஅதை பார்போம்…
சிறந்த இடை பிங்கலையும் சுழினையோடு
சிறப்பான காந்தாரி யத்திச் சிங்கூவையாம்
பிறந்த அலம் பூரூடனொடு குகுதன்றானூம்
பேரான சங்கினியும் வயிரவன்றான்
திறந்தவிவை பத்துந்தான் நாடியாகும்
திரிமூன்று நாளையினி லொடுங்கும்பாரு
பத்து நாடிகள் என்பவை இடா ,பிங்களா .சுழிமுனை… என்பவற்றோடுகாந்தாரி,அத்தி..சிங்கவை,அலம்புருடன்.. குகுதன்,சங்கினி,வயிரவன்…என பத்து நாடிகளாம்..
இதில்இடா ,பிங்களா .சுழிமுனை… இவை மூன்றும் …வாதத்தில் ஒடுங்கும் இயல்புடையவையாகும்.ீ. .
இடா …பிங்கலை…என்ற இரண்டு நாடிகளூம் உடம்பில் அடிபபாகமாகிய மூலத்திலிருந்துகிளம்பி….
சுழிமுனையோடு.. கூடி ஏறி சிரசு வரை சென்று முட்டி,அவை உகார வளைவில் திரும்பி,வரும் வழி நாசி,நடுப்புருவம் ,நெற்றி…ஆகிய இடங்களை தொட்டுக்கொண்டுமீண்டும் மூலத்தில் சேருகின்றது….
அடுத்துகந்தாரி என்ற நாடி உந்தி கமலத்தில் இருந்து கிளம்பி நரம்புகள் ஏழுக்கும் உருவமாகி மேலே சென்று சிரசில் மூட்டி மீண்டும் கண்டத்தில் புகுந்து நாவின் அடியில் வந்த அமர்ந்து விடுக்கின்றது
அடுத்து அத்தி சிங்குவை..
இரண்டும் மூலத்தின் மேற்பகுதியில் இருந்து கிளம்பி மேலே ஏறி இரண்டு செவிகளில் உள்ள காதுகளை தொட்டுக்கொண்டு..நரம்புகளில் எல்லாம் துடிப்புகளை உண்டாக்கிக் இரண்டு கண்களில் வந்து நிற்க்கும.
அடுத்து அலம்புருடன்,வயிரவனும் என்ற இரண்டு நாடிகளும் அடிமூலம் பற்றி மேலே ஏறி இரண்டுகன்னங்களிலும் வந்து நிற்க்கும்.
அடுத்து..சங்கினியும்குரு என்ற நாடிகள் நாபித் தளத்தில் தோன்றி குதம் வரையில்ஓடிக்கொண்டுயிருக்கும்..
இத்தனை செய்திகள் நாடிகளைப்பற்றி இருந்தும் நாம் இன்னும் முழுமையும் உணரவில்லை தெரிந்துகொள்ள பல வழியிருந்தும் நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிக்க வில்லை.பல நூற்று கக்காண சித்தர்கள் நூல்கள் இருந்தும் நாம் அதனை படிக்கமுற்படவில்லை.ஒருவேளைஅவைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலும் ,பாமரத்தமிழில் ,மறைபொருள் அதிகம் கொண்டு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் ..
மனித உடலானது தொண்ணூற்றிஆறுதத்துவங்களால் ஆனது அதில் தசநாடிகளும் அடங்கியது . அது பற்றி திருமூலர் பின்வருமாறு உரைக்கிறார்.
"பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே------
இந்த தொண்ணூற்றி ஆறு தத்துவங்களை அறிந்து, தெளிந்து கொள்வதே சித்தர்களின்ஞானத்தின் அடிப்படையாகிறது
நமது ஔவைப் பிராட்டி அத்தனை ஞானத்தின் அடிப்படைச் செய்திகளையும் சுருக்கமாக இரண்டடியில் விளக்கியுள்ளார் .இந்த பத்துநாடிகளும் மனித உடம்பில் உள்ள ஆறுஆதாரங்களையும், மனதையும், உயிரையும்இயக்குகிறது என்பது சித்தர்களின்முடிவாகும்.
36) மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு.
மெய்யெல்லாமாகி = இந்த உடல் முழுவதுமாகி
நரம்போடெலும்பிசைந்து = உடலெங்கும் இருக்கும் நரம்புகள் ,மற்றும் எலும்புகளுடன் இணைந்து
நாடிப் புணர்வு. = நாடிகள் செயல்படுகிறது .
பொய்யில்லை = பொய்யில்லை உண்மையே ,! கண்ணால் காணமுடியவில்லை என்பதால் பொய் என நினைக்க வேண்டாம்
நாடிகள் உடம்பெங்கும் வியாபித்து இருக்கும் நரம்புகள் மற்றும் எலும்புகளுடன் இணைந்து செயல் படுகிறது .இதை கண்ணால் காணமுடியவில்லை என்பதால் பொய் என நினைக்கவேண்டாம் என்கிறார் . அவர் பொய்யில்லை என்று சொல்லுவது கண்ணுக்குத் தெரியாத நாடிகளை பற்றிமட்டுமில்லை மெய்யெல்லாமாகி என்றுக் கூறி அதிலும் ஒரு நுட்பத்தை தெரிவிக்கிறார் என்று நினைக்கிறேன் .
மண்ணோடு மண்ணாக மறைந்தொழியும் இந்த மனித உடலைநாம்என்றும்உள்ளதுஎன்று பொருள்படும் மெய் என்ற சொல்லால் அழைக்கின்றோம்.
மனித உடல் அழியக்கூடியதே. ஆயினும், அதனுள் என்றும் உள்ளதான அறிவுப் பொருளாகிய ‘உயிர்’ இணைந்துள்ளது. இந்த உண்மையை சங்ககாலம் தொட்டு வழங்கிவரும் தமிழ்க் கவிதைகள் உயிருக்கு வழங்கியுள்ள ‘மன்’ என்னும் நிலைபேற்றுக்குறிப்பு முன்ஒட்டு. தமிழில் ‘மன்’ என்பதற்கு ‘என்றும் உள்ளது’ என்று பொருள். காட்டாக, சில பாடல்களைக் காண்போம்.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. - என்கிறது திருக்குறள்:244
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல். என்கிறது (மணிமேகலை – 25:228-231)
மெய்யனான இறைவனும், என்றுமுள்ள நிலைப்பேறு பெற்ற உயிரும் உள்ளே உறைவதால், அழியும் தன்மையுள்ள,பொய்யான ஊன் உடம்பை மெய் எனத் தமிழர் காலம் காலமாக அழைத்துவருகின்றனர்
தமிழில் வெற்றுச் சொல் என்பதே கிடையாது., தமிழ் மொழி மெய் அநுபவம் மூலம் உருவாக்கப் பட்டுள்ளதால் எப்படிப்பட்ட இடையூறு இடை இடையே தோன்றி வந்தாலும் இந்த மொழி அசைக்க முடியாத சக்தியாக காலத்தை கடந்து நிலைத்து நிற்கிறது
நம் உடல் அவரவர் கையால் எட்டு ஜாண்! அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே! இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல கணக்குகளைச் சொல்கிறது! உலகிலுள்ள மனிதர் ஒவ்வொருவரின் உயரமும் வெவ்வேற என பிரித்தே காட்டுகிறது. ஆனால் நமது மெய்ஞ்ஞானிகளோ மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே என்றும் அவர்களின் வடிவமைப்பும் ஒன்றே என என்றும் நிறுவுகிறது எவ்விதத்திலும் மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது என்று எல்லோரின் உயரமும் எட்டு ஜாணே என்று உண்மையை கூறி விட்டனர்!
உடம்பு அழிந்தால் உயிர் அழியும். உயிர் அழிந்தால் மெய்ஞ்ஞானம் கிடைக்காது . எனவே உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பையும் வளர்க்கலாம் , விளைவாக உயிரையும் வளர்க்கலாம் . உயிரை வளர்த்தால் சீவன், சிவமாகும். ஞானம் சித்திக்கும் .
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!!!
— திரு மூலர் —
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே” – –திருமூலர் திருமந்திரம்.
இவ்வாறு மெய் எனும் இந்த உடலுக்குள்உறு பொருள் மறைவாக இருப்பது போல் இந்தஉடலுக்குள் கண்ணுக்குத் தெரியும் நரம்புகளும் எலும்புகளுக்கும் இடையே
நாடிகளும் இயைந்து வினையாற்றுகிறது என்கிறார் எனக் கொள்ளலாம் .
37 ) உத்திமுதலாகி ஒங்காரத்து உட்ப்பொருளாய
நின்றது நாடி நிலை
உத்திமுதலாகி = நாபிக் கமலத்தை முதன்மையாக்கிக் கொண்டு ,
ஒங்காரத்து உட்ப்பொருளாய = ஓங்காரத்தின் உட்பொருளாக விளக்குவதாக ,
நின்றது = நிலைத்து இருக்கிறது
--நாடி நிலை = உடலில் இயங்குவது நாடிகளின் நிலை
ஓங்காரத்தின் மறைபொருளாக இருக்கும் பேருண்மையை ஆதாரமாகக் கொண்டு , உந்திக்கமலத்தில் இருந்து உதித்திருக்கும் நாடிகள், செயல்படுவதாகக் அவ்வாய்ப்பிராட்டி கூறுகிறார் .
.
முதலில் ஓங்காரம் என்பது என்ன என்பதை ,முழுமையாக அறியவேண்டும் . பின்புதான் அதன் உட்பொருளாக இருப்பது எது என அறியமுடியும் .
''ஓம் - என்ற ஒலியையே ஓங்காரம்-பிரணவம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு ஓங்காரம்-பிரணவம் ஒலியே நிலவி இருந்தது என்றும் , ஓங்காரத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பரசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
விஷயம் தெரிந்தவர்கள் இதை ஆங்கிலத்தில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அதுவே சரி .
சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக்கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக
மாணிக்க வாசகர்,
“”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” --(திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்.
.
அ, உ, ம ஆகியவை சேர்ந்த “ஓம்” எனும் பிரணவமாய் ஒலிக்கிறது
ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்! சமணம் , புத்த மதம், சீக்கியர்கள், சைனாவில் கூட "ஓம்" புனிதமாக கருதப்படுகிறது .
சிவமே ஓங்காரத்தின் உட்பொருள் எனத் திருமுறைகள் அனைத்தும் கூறுகின்றன.
* ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவனாகும்
* ஓங்காரன்காண்
* ஓங்காரத் துட்பொருளாய் நின்றான்காண்
* ஓங்காரத் தொருவனை
இவை போன்ற சொற்றொடர்கள் பல திருமுறைகளில் உள்ளன.
“ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம்கண்டுதூங்கார் … … என்செவார் யமதூதருக்கே”என்ற கந்தர் அலங்காரப் பாடலுள் முருகனே ஓங்காரத்துட்பொருள் என அருணகிரிநாதர் பாடுகின்றர்.
திருப்புகழ் ஒன்றில், “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” என்ற அடியில், ‘ஓம்” என்ற ஓரெழுத்து மந்திரமே, தன்னுள் அடங்கியிருந்த திருவைந்தெழுத்த
ு மந்திரங்களையும் விரியச் செய்து ஆறெழுத்து மந்திரமாயிற்று என உணர்த்தினார்.
திருமந்திரத்தில்
ஓங்காரத்தின் சிறப்புப்பற்றி,
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
என்று திருமூலர் பாடியுள்ளார்.
சட்டைமுனி சூத்திரத்தில்
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.
இவ்வாறு ஓங்காரத்தின் சிறப்புகள் பல இருந்தாலும் ., அதன் உட்பொருளாதான் இந்த உடலை இயக்குகிறது என்பதை அறியமுடிகிறது
அகத்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்.
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடிஇதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.இறைவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.
"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்
"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகத்தியர் முதுமொழி ஞானம்.
இவ்வாறு உடம்பினுள்ளே இயங்கும் இறைசக்தியான ஓங்காரம் , நாடிகள் வழியே பிராணனாக பரவி இயங்குகிறது
அடுத்த செய்தியை அடுத்தப்பதிவில் மிக விரைவில் காணலாம் .
- *சித்தர்களின் குரல் 

No comments:

Post a Comment