Monday 3 September 2018

திருமூலர் கூறும் கரு உற்பத்தி ரகசியம்-7

திருமூலர் கூறும் கரு உற்பத்தி ரகசியம்-7

திருமூலரின் திருமந்திரத்தில் - ( ஆண்/ பெண் குழந்தை பிறக்க ) குழந்தை குறையில்லாது பிறக்க, "உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக " ( நமது பாரம்பரிய ரகசியம் ) திருமூலர் சொல்லும் அபூர்வ ரகசியம். !!!

 புரிய கூடியவங்க புரிஞ்சி கொள்ளுங்கோ....?

(உறவின் போதே ஆண்/பெண்/அலி/திறமை/ஊனம் நிற்ணயிக்க படுகிறது)

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியும் காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை பூண்பது மாதா பிதா வழி போலவே ஆம்பதி செய்தான் அச் சோதி தன் ஆண்மையே. (திருமந்திரம் 477)

477. இறைவன் தாய் தந்தை வழி உடலைப் படைக்கின்றான் : உயிர்க்கு ஆண், பெண், அலி என்ற வேறுபாடு இல்லை.

 பெருமையுடனே வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ காண்பது கற்பனையாகும். அப்படிப்பட்ட உயிருக்கு ஏற்ற உடலை தாய் தந்தையின் தன்மையைக் கொண்டு படைப்பது சிவபெருமானின் வல்லமையாம்.

ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும் பூண்இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகும் ஆகில் தரணி முழுது ஆளும் பாணவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம் 478)

 478. கருவில் ஆண் பெண் மாற்றம் அமையும் விதம் :
 ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் ஆண் ஆகும். பெண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் பெண்ணாகும். ஆண் பெண் பண்பு சமமானால் அவ்வுயிர் அலியாகும். ஆள் வினை முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாய்ப் பிறக்கும். அது உலகை ஆளும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மை இருக்குமானால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.

 பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும் பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. (திருமந்திரம் 479)

479. யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல் : ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு. அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவை இப்படி நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு. யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்.

 பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும் பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும் பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும் பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே. (திருமந்திரம் 480)

 480. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்: சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் முடமாகும். அவ்வாயு தடைப்பட்டால் குழந்தை கூனாய்ப் பிறக்கும். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு இல்லை.

மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம் மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம் மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. (திருமந்திரம் 481)

 481. கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு இருக்க வேண்டிய நிலைமை :

 அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த புத்தியுடையதாய் விளங்கும். அவள் வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும்.

குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலி ஆகும்கொண்ட கால் ஒக்கிலே. (திருமந்திரம் 482)

 482. மூச்சுக் காற்றின் இயல்புக்கு ஏற்பக் குழந்தையின் பால் வேறுபாடு அமையும்:

இன்ப நுகர்ச்சியின் போது ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு வலது பக்க நாசியில் (சூரிய கலையில்) இயங்கினால் ஆண் குழந்தையாகும். ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு இடது பக்க நாசியில் (சந்திர கலையில்) இயங்கினால் பெண் குழந்தையாகும். ஆணின் மூச்சு வலது பக்க நாசியிலும், இடது பக்க நாசியிலும் இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும். சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவுடன் அபானன் எனப்படும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில் கொண்ட குழவியுங் கோமளம் ஆயிடும் கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோள்வளை யாட்கே. (திருமந்திரம் 483)

483. உயிர்ப்பின் இயக்கத்து ஏற்பக் கரு அமைதல் :
ஆண் பெண் இருவருக்கும் உயிர்ப்பு ஒத்து இருக்குமானால் கருவில் உள்ள குழந்தை அழகாக விளங்கும். புணரும் அக்காலத்தில் அந்த இருவருக்கும் உயிர்ப்புத் தடுமாறினால் பெண்ணுக்குக் கரு உண்டாக வாய்ப்பு இல்லையாகும்.

கோள்வளை உந்தியில் கொண்ட குழவியும் தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம் பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப் போல் வளர்ந்து உள்ளே பொருந்து உரு ஆமே. (திருமந்திரம் 484)

484. பொற்சிலை எனப் பிறக்குமாறு :
பெண்ணின் வயிற்றில் அமைந்த குழந்தை அண்ணாக்கினுள்ளே விளங்கும் பேரொளி போன்றதாகும். அக் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவத்தைப் பெறும்.

இன்னும் அபூர்வ ரகசியங்கள் தொடரும்....

No comments:

Post a Comment